இந்தியாவில் இருக்கும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிகப்படியான சலுகைகள் அளித்து வரும் நிலையில், இந்தச் சலுகைகளை சரியாகத் தான் இந்நிறுவனங்கள் பெறுகிறதா என்பதைச் செக் செய்யப் புதிய சோதனை திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
மத்திய அரசின் இந்தத் திடீர் முடிவால் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஏற்கனவே தரமற்ற பேட்டரிகள் பயன்படுத்திய காரணத்தால் தான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ பிடிக்கிறது என ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது, அதற்கான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தை எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
கனரகத் தொழிற்துறை அமைச்சகம்
மத்திய கனரகத் தொழிற்துறை அமைச்சகம் உத்தரவின் பெயரில் எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் மக்களிடம் விற்பனை செய்த 12க்கும் அதிகமான வாகனங்களை அரசு வாங்கி, அதை முழுமையாகப் பிரித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.
FAME-INDIA திட்டம்
இதன் மூலம் மத்திய அரசின் FAME-INDIA திட்டத்தின் கீழ் உள்நாட்டு உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தப்படுகிறதா அல்லது விதிமுறையை மீறி மானியம் பெறுகிறதா எனக் கண்டுப்பிடிக்க முடிவு செய்துள்ளது.
ஆய்வு
இந்த ஆய்வை ARAI, ICAT மற்றும் Manesar ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகிறது. மேலும் இந்த ஆய்வின் முடிவுகள் அடுத்த சில நாட்களில் வெளியாக உள்ளதால் எந்த நிறுவனங்கள் எல்லாம் விதிமுறையைக் கடைப்பிடிக்காமல் மானியம் வாங்கியுள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிய வரும்.
முதல் முறையாகச்
சந்தையில் இருக்கும் வாகனங்களை வாங்கி முழுமையாகப் பிரித்துப் பார்க்கும் இப்புதிய சோதனை திட்டத்தின் மூலம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் தான் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆதாரத்துடன் காட்ட முடியும். மேலும் இதுபோன்ற சோதனையை மத்திய அரசு முதல் முறையாகச் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மானியம்
இந்தச் சோதனையில் FAME-INDIA திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற அனைத்து நிறுவனங்களின் தயாரிப்புகளும் ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும் இந்த 12 வாகனங்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வாங்கியுள்ளது மத்திய அரசு.
எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள்
இந்தியாவில் சில எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் FAME-INDIA திட்டத்தின் கீழ் மானியத்தைப் பெற்றுக்கொண்டு வெளிநாட்டில் இருந்து குறிப்பாகச் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை அதிகளவில் கொண்டு வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.