அமெரிக்கச் செனட் புதன்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் இனி அந்நாட்டின் அரசு ஊழியர்கள், சீனாவின் ஷாட் வீடியோ செயலியான TikTok ஐ அரசுக்குச் சொந்தமான கருவிகள் அதாவது லேப்டாப், ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர் போன்ற எதிலும் பயன்படுத்தக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் தடை மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
சீன நிறுவனங்களும், சீன சேவைகள் டிரம்ப் ஆட்சியிலும் சரி, பைடன் ஆட்சியிலும் சரி அதிகப்படியான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது TikTok ஐ அரசுக்குச் சொந்தமான கருவிகளில் பயன்படுத்தக் கூடாது என மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்குப் பின் என்ன நடக்கும்..?
அமெரிக்கச் சென்ட்
அமெரிக்கச் சென்ட் புதன்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் TikTok ஐ அரசுக்குச் சொந்தமான கருவிகளில் பயன்படுத்தக் கூடாது என மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், இதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்படும்.
அமெரிக்க நாடாளுமன்றம்
இதன் பின்பு இந்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் இருக்கும் பிரதிநிதிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்பே நடைமுறைக்கு வரும். அடுத்த வாரம் முடிய உள்ள அமெரிக்க நாடாளுமன்ற கூட்டம் முடிவதற்குள் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை, செனட் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
டிக்டாக் செயலி
டிக்டாக் செயலி மூலம் அமெரிக்க மக்களையும், அரசு அதிகாரிகளையும் சீனா அரசு வேவு பார்ப்பதாகவும், இது அமெரிக்க மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுதல் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் டிக்டாக் செயலிக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து உள்ளனர்.
வடக்கு டகோட்டா மற்றும் அயோவா
செனட் என்பது அமெரிக்க மாநிலங்களுக்கான பிரதிநிதி செய்யும் அமைப்பாக இருக்கும் நிலையில், கடந்த வாரம் வடக்கு டகோட்டா மற்றும் அயோவா மாநிலங்கள் டிக்டாக்-ஐ அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் கருவிகளில் பயன்படுத்த தடை விதித்த நிலையில் தற்போது செனட் மசோதா வந்துள்ளது. மேலும் அதிகளவிலான மாநிலங்கள் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அரசு தரவுகள் கசிவு
அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் கருவிகளில் டிக்டாக்-ஐ பயன்படுத்துவதன் மூலம் முக்கியமான அரசு தரவுகள் சீன அரசு கைப்பற்றிவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அமெரிக்காவில் டிபென்ஸ், ஹோம்லேண்டு செக்யூரிட்டி, சில மாநில துறைகள் டிக்டாக் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது.
சீன நிறுவனங்கள்
சமீபத்தில் அமெரிக்க அரசு சீனாவின் ஹூவாய் டெக்னாலஜிஸ் மற்றும் ZTE ஆகிய 2 நிறுவனங்களும் ஏற்கனவே ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனால் (FCC) அச்சுறுத்தலாகப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் இருக்கும் நிலையில், புதிய விதிகள் கீழ் இவ்விரு நிறுவனங்களின் சாதனங்களின் எதிர்கால அங்கீகாரத்தையும் தடை செய்துள்ளது.
தடை செய்யப்பட்ட நிறுவனங்கள்
இந்த உத்தரவுடன் சீனாவின் Dahua Technology, Hangzhou Hikvision Digital Technology Co Ltd மற்றும் Hytera Communications Corp ஆகியவற்றால் செய்யப்பட்ட உபகரணங்களின் விற்பனை அல்லது இறக்குமதியை அமெரிக்க அரசின் FCC அமைப்புத் தடை செய்துள்ளது.