இந்திய டெலிகாம் நிறுவனங்கள் வர்த்தகப் போட்டியின் காரணமாகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக AGR கட்டணம் டெலிகாம் நிறுவனங்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது, இந்தச் சூழ்நிலையில் டெலிகாம் நிறுவனத்தை மட்டும் அல்லாமல் டெலிகாம் நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்த நிறுவனங்களையும் காப்பாற்ற வேண்டிய முக்கியமான கட்டத்திலும் நெருக்கடியிலும் மோடி தலைமையிலான மத்திய அரசு உள்ளது.
சமீபத்தில் வோடபோன் ஐடியா தனது லைசென்ஸ் கட்டணத்தைச் செலுத்த கூடப் பணம் இல்லாமல் இருந்த வேளையில், கடைசி நேரத்தில் செலுத்தியது. இதற்கு முன்பு இந்நிறுவனத்தின் பங்குதாரரான குமார் மங்களம் பிர்லா தனது பங்குகளை அரசுக்கோ அல்லது அரசு கைகாட்டும் நிறுவனத்திற்கும் கொடுக்கவும் தயாராக உள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில் AGR கட்டண நிலுவையில் சிக்கியுள்ள வோடபோன் ஐடியா, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களைக் காப்பாற்ற மத்திய அரசு புதிய சலுகையை அறிவிக்கத் திட்டமிட்டு வருகிறது.
மத்திய அரசு திட்டம்
மத்திய அரசு தற்போது வோடபோன் ஐடியா, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களும் தங்களது கட்டண நிலுவையை 20 வருடத்தில் திரும்பிச் செலுத்தும் சலுகையை அளிக்க முடியுமா என்றும், அதற்கான வழிமுறைகள் என்ன..? கட்டமைப்புகள் என்ன..? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
AGR கட்டண நிலுவை
AGR கட்டணத்தில் எந்தச் சலுகைகளை அளிக்கப்பட வேண்டும் என்றாலும் சுப்ரீம் கோர்ட் வெளியிட்டு உள்ள உத்தரவைக் கட்டாயம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம் மத்திய அரசு டெலிகாம் நிறுவனங்களுக்கு AGR கட்டணங்களைச் செலுத்த 20 வருட காலம் அவகாசம் கொடுத்த நிலையில், இத்தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் அடுத்த 10 வருடத்தில் அதாவது மார்ச் 31, 2031க்குள் AGR கட்டணத்தை முழுமையாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு மீறல்
தற்போது மத்திய அரசுக்குச் சுப்ரீம் கோர்ட்-ன் உத்தரவை மீற வேண்டும் என்பது இல்லை, ஆனால் இதேவேளையில் டெலிகாம் துறையில் ஆரோக்கியம், டெலிகாம் நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்த வங்கிகள், டெலிகாம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் என மொத்த கட்டமைப்பைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காகவே இந்தக் கால நீட்டிப்பை எப்படிச் செய்வது என்பது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.
வோடபோன் ஐடியா நிர்வாகத் தலைவர்
சமீபத்தில் காலாண்டு முடிவுகளை வெளியிடும் நிகழ்ச்சியில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ரவிந்தர் தாக்கர் கூறுகையில், AGR கட்டண நிலுவையைச் செலுத்துவதற்குக் கால நீட்டிப்புச் செய்ய அரசிடம் அதிகாரம் இல்லை என விளக்கம் கொடுத்தார். ஆனாலும் மத்திய அரசு டெலிகாம் துறை மற்றும் ஊழியர்களைக் காப்பாற்ற ஆய்வு செய்து வருகிறது.
வோடபோன் ஐடியா-க்கு லாபம்
தற்போது வோடபோன் ஐடியா நிறுவனம் இருக்கும் நிலையில் AGR கட்டண நிலுவை செலுத்த கால நீட்டிப்பு மட்டும் அல்ல ஒரு சில தவணைகளைச் செலுத்துவதில் தற்காலிகமாகச் சலுகை கொடுத்தாலும் அடுத்தச் சில காலாண்டுகளுக்கு இந்நிறுவனத்தால் தாக்குப்பிடிக்க முடியும். அந்த அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் தான் வோடபோன் ஐடியா நிறுவனம் உள்ளது.
வோடபோன் ஐடியா நிதிநிலை
ஜூன் மாத முடிவில் வோடபோன் ஐடியா நிறுவனத்திடம் 920 கோடி ரூபாய் அளவிலான பணம் மற்றும் 1.9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் சுமை உள்ளது. இதில் AGR கட்டணம் மட்டும் 58,254 கோடி ரூபாய், இந்தக் கட்டண நிலுவையில் 7,854 கோடி ரூபாயைச் செலுத்தியுள்ளது வோடாபோன் ஐடியா. வருகிற மார்ச் 2022க்குள் அடுத்த AGR கட்டண நிலுவைத் தொகையான 9,000 கோடி ரூபாயை செலுத்த வேண்டும்.
இரண்டே வாய்ப்பு தான்
தற்போது இருக்கும் சூழ்நிலையில் புதிதாக முதலீடு திரட்டினாலோ அல்லது அரசு சலுகை கொடுத்தால் மட்டுமே மார்ச் 2022 தவணையில் இருந்து தப்பிக்க முடியும் இல்லையெனில் கட்டாயம் பெரும் பிரச்சனை அல்லது நிறுவனத்தைத் திவாலாக அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்படும். இதற்கிடையில் வோடபோன் ஐடியா 5ஜி சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வருகிறது.