டெல்லி: நாட்டின் மிகப்பெரிய தனியார்மயமாக்கல் இயக்கத்தில், நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின், 52.98% பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளது.
மேலும் இதில் ஆர்வமுள்ளவர்கள் மே 2க்குள் தங்களது விருப்பங்களை தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியிலும், பொருளாதாரத்தினை மேம்படுத்தவும், முதலீடுகளை அதிகரிக்கவும், சில பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகளை விற்க போவதாக கடந்த சில மாதங்களாகவே அரசு கூறி வந்தது.
பங்குகளை விற்க ஒப்புதல்
பாரத் பெட்ரோலியம் உள்பட ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அதன் பங்குகளை விற்று நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இது பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தனியார்மயமாக்கல் நடவடிக்கையாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது.
மந்த நிலையை போக்க அரசு நடவடிக்கை
இந்த தனியார்மயம் நடவடிக்கையானது நாட்டில் நிலவி வரும் மந்த நிலையை போக்கவும், நிதியை உட்செலுத்தவும், நிதி பற்றாக்குறையை போக்கவும் ஒரு சிறந்த வழியாக கருதப்படுவதாகவும் மத்திய அரசின் தரப்பில் முன்னரே கூறப்பட்டது. இதனால் இந்தியாவில் நிலவி வரும் மந்த நிலையை போக்க முடியும் எனவும் மத்திய அரசு நம்புகிறது.
பங்கு விற்பனை
இந்த நிலையில் தான் மத்திய அரசு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள தனது 114.91 கோடி ரூபாய் பங்குகளை, அதாவது 52.98% பங்குகளை விற்க முடிவும் செய்துள்ளது. இதோடு நிறுவனத்தின் மீதான தங்களது கட்டுப்பாடுளையும் பங்குகளை வாங்குவோருக்கு மாற்றும் முடிவை மேற்கொண்டுள்ளது.
நுமாலிகர் பங்கு நிறுவனத்தில் மாற்றம் இல்லை
ஆனால் அதே சமயம் நுமாலிகார் சுத்திகரிப்பு நிறுவனத்தில் கொண்டுள்ள 61.65% பங்குகள் நிலவரத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என்று மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த இந்த பங்கு விற்பனையில் பங்கேற்க பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது.
தகுதியான நிறுவனம்
மேலும் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள எந்தவொரு தனியார் நிறுவனமும் இதனை ஏலத்தில் எடுக்க தகுதியான நிறுவனமாக கூறப்படுகிறது. மேலும் நான்கு நிறுவனங்களுக்கு மேல் கூட்டாக ஏலம் எடுக்க அனுமதிக்கப்படமாட்டாது என்றும் கூறப்படுகிறது. இந்த கூட்டமைப்பில் முன்னணி உறுப்பினர் 40% பங்குகளையாவது வைத்திருக்க வேண்டும். மற்றவர்கள் குறைந்தபட்சம் 1 பில்லியன் டாலர் நிகர மதிப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
பிபிசிஎல்லின் திறன்
மேலும் இந்த கூட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் 45 நாட்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. இந்தியாவின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்பில் 14% திறன் கொண்டுள்ள பிபிசிஎல் நிறுவனம், எரிபொருள் சந்தையில் நான்கில் ஒரு பங்கினை கொண்டுள்ளது. பிபிசிஎல்லின் சந்தை மூலதனம் 87,388 கோடி ரூபாயாகும். பிபிசிஎல் 15,177 பெட்ரோல் பம்புகள் மற்றும் 6,011 எல்பிஜி விநியோகஸ்தர் ஏஜென்சிகளையும் கொண்டுள்ளது.