டெல்லி: வருமான வரித்துறையில் பொது நலன் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை மேற்கோளிட்டு 21 வருமான வரி அதிகாரிகளை மத்திய அரசாங்கம் வலுகட்டாயமாக விருப்ப ஓய்வு கொடுத்துள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அதிலும் நடப்பு நிதியாண்டில் இது வரை 85 அதிகாரிகள் இது போன்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்களாம், இதில் 64 பேர் உயர் பதவியில் உள்ள மூத்த அதிகாரிகள் என்றும் கூறப்படுகிறது.
இவர்கள் ஊழல், நடைமுறை மீறல்களுக்கு அதிக நடவடிக்கை, தங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தவர்கள், வரி செலுத்துவோரை துன்புறுத்திய அதிகாரிகள் என பலர் மீதும் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.
இவ்வாறு கட்டாய ஓய்வு பெற்ற அதிகாரிகள் சட்டவிரோதமான செயல்கள், வருமானத்திற்கு ஏற்றம் அல்லாத சொத்துகளை, வருமானத்திற்கு ஏற்றவாறு சொத்துகளை பதவியை பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்வது என பலர் மத்திய புலனாய்வு பிரிவின் வலையில் சிக்கியுள்ளார்களாம்.
மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றதிலிருந்தே, இது போன்ற ஊழல் பெருச்சாலிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. எனினும் இவ்வாறு கட்டாய ஓய்வு பெற்றவர்கள் தீர்ப்பாயங்கள் அல்லது நீதிமன்றங்களை அணுகலாம்.
இது எப்போதும் வழக்கமாக நடக்கும் செயல் என்றாலும், மத்திய அரசின் இதுபோன்ற துரிதமான நடவடிக்கைகள் வரவேற்கதக்கது தான். ஏனெனில் இனி அடுத்த முறை இது போன்ற ஊழல் இன்னும் பல குறிப்பிட்ட பிரச்சனைகளில் ஈடுபடுவோருக்கு பயம் ஏற்படும். இதனால் தவறுகள் குறையும். சரியான முறையில் அரசு அதிகாரிகள் வேலை செய்யும் போது மக்களிடையேயும் சரியான ஆவணங்களை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும்.
மேலும் இதன் மூலம் கறுப்பு பண பதுக்கல்கள் குறையவும் வாய்ப்பிருக்கிறது, இது தவிர முன்னதாக இதே போன்று பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் சிலர் பெண்களிடம் அலுவலகத்தில் தவறாக நடக்க முயற்சித்ததாக கூட பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். இது போன்ற தவறுகளை கண்டறிந்து பணி நீக்கம் செய்வது மிக நல்ல விஷயமே.
இதனால் அலுவலகத்தில் இருக்கும் மற்ற அதிகாரிகளுக்கு பயம் ஏற்படும். தவறு செய்தால் வேலை போய்விடும் என்ற எண்ணம் வரும். மேலும் தவறுகளும் குறையும்.