கிரிப்டோகரன்சியில் முதலீடு மற்றும் வர்த்தகம் செய்பவர்கள் அனைவரையும் வருமான வரித்துறையின் கண்காணிப்புக்குள் கொண்டு வர மத்திய அரசு முக்கியமான மாற்றத்தைச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்தியாவில் கிரிப்டோ முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதால் இப்பிரிவு முதலீட்டாளர்களையும் முதலீடுகளை விரைவாகவும் முறையாகவும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வருமான வரிச் சட்டம்
மத்திய அரசு தற்போது இருக்கும் வருமான வரிச் சட்டம் மற்றும் வருமானத்தை வெளிப்படுத்தல் விதிகளில் கிரிப்டோகரன்சி போன்ற புதிய முதலீடுகளை இணைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு வருகிற பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யும் போது வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கிரிப்டோகரன்சி முதலீடு மற்றும் வருமானம்
இந்திய முதலீட்டாளர்கள் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் செய்யும் கிரிப்டோகரன்சி முதலீடு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் தகவல்களை முழுமையாகப் பெற வேண்டும் என்பதற்காக வருமான வரிச் சட்டம் 26A மற்றும் வருடாந்திர தகவல் ஒழுங்குமுறை விதிகளில் மாற்றம் செய்ய உள்ளது.
வருமான வரி தாக்கல்
வருமான வரிச் சட்டத்தில் கிரிப்டோகரன்சி, கிரிப்டோ சொத்துக்கள் அல்லது டிஜிட்டல் கரன்சி போன்றவை இணைக்கப்படும் போது, வருமான வரி தாக்கல் செய்யும் போது கிரிப்டோகரன்சி முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் அதன் முதலீடு குறித்துக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டி வரும்.
வங்கி தரவுகள்
தற்போது மத்திய அரசுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் வருமான வரித் துறை வங்கிகளிடம் அதன் வாடிக்கையாளர் செய்த கிரிப்டோகரன்சி பரிமாற்றம் குறித்துத் தகவல்களைப் பெற முடியாது. காரணம் வருமான வரிச் சட்டத்தில் கிரிப்டோகரன்சி இடம்பெறவில்லை.
கிரிப்டோகரன்சி பரிமாற்ற தரவுகள்
மேலே குறிப்பிட்ட மாற்றங்களைச் செய்தால் வருமான வரித்துறை வங்கிகளிடம் இருந்து நேரடியாக ஒவ்வொரு வாடிக்கையாளரின் கிரிப்டோகரன்சி பரிமாற்ற தரவுகளைப் பெற முடியும். பெரும்பாலான கிரிப்டோ வர்த்தகத் தளங்கள் வங்கிகளின் வாயிலாகத் தான் பணத்தைப் பரிமாற்றம் செய்கிறது என்பதால் அதன் மூலம் கிடைக்கும் வருமானம், முதலீட்டுத் தரவுகளை எளிதாக மத்திய அரசு பெற முடியும்.
வெளிநாட்டுச் சொத்து விபரங்கள்
இதேபோல் வெளிநாட்டில் இந்தியர்கள் வைத்துள்ள கிரிப்டோகரன்சி சொத்துக்களின் விபரங்களைச் சமர்ப்பிக்கும் விதிகளையும் மத்திய அரசு மாற்ற உள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் வெளிநாட்டில் வைத்துள்ள அனைத்து கிரிப்டோ சொத்துக்களின் விபரங்களையும் பெற முடியும்.
வரி விதிப்பு
மத்திய நிதியமைச்சகம் இந்த இரண்டு மாற்றங்களைக் கிரிப்டோகரன்சி மசோதா இல்லாமல் தனியாகச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிப்டோகரன்சி மசோதாவில் இதர பல ஒழுங்குமுறை நடவடிக்கைகள் இருக்கும். மேலும் இந்த மாற்றத்தின் மூலம் கிரிப்டோ முதலீட்டில் கிடைக்கும் வருமானத்திற்கு வரியை மத்திய அரசால் சரியான முறையில் வசூலிக்க முடியும்.
டாக்ஸ் பாஸ்புக்
வருடாந்திர தகவல் ஒழுங்குமுறை எனப்படும் Annual Information Regulation (AIR) அறிக்கையில் வருமான வரி செலுத்துவோர் செய்யும் அனைத்து முதலீடுகளின் தரவுகளும் இதில் இடம்பெற்று இருக்கும் இதை டாக்ஸ் பாஸ்புக் எனவும் அழைக்கப்படுவது உண்டு. இதில் வைப்பு நிதி, மியூச்சவல் பண்ட், RD, நகைகள் போன்றவற்றில் 2 லட்சத்திற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும் தரவுகள் அனைத்தும் இடம்பெறும்.