இந்தியாவில் கொரோனா 2வது அலை தொற்று பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசு நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சரிவு பாதை நோக்கிச் செல்லாமல் இருக்க 2020ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதை போலவே 2வது பொருளாதார ஊக்க கொள்ளை திட்டத்தை அறிவிக்கத் திட்டமிட்டு வருகிறது.
இந்த முறை மத்திய அரசு கொரோனா பாதிப்புகளைக் கணித்து பொருளாதாரத்தில் பலவீனமான பிரிவு மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு புதிய நிதியியல் உதவிகளை அளிக்கும் என தகவல்கள் கூறுகிறது.
2020 லாக்டவுன்
2020ஆம் ஆண்டில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த போது மார்ச் 26 முதல் மே 17 வரையில் முழு ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. இந்த லாக்டவுன் காலத்தில் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
பொருளாதார ஊக்க திட்டம்
இந்த பாதிப்புகளைச் சரிக்கட்ட மத்திய நிதியமைச்சகம் சுமார் 20.97 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பொருளாதார ஊக்க திட்டத்தை அறிவித்தது. மேலும் இந்த ஊக்கத் திட்டத்திற்கான நிதிகள் அனைத்தையும் கடன் மற்றும் வருவாய் வாயிலாக ஈடு செய்ய திட்டமிடப்பட்டது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்நிலையில் 2வது கொரோனா தொற்று காலத்தைச் சமாளிக்க மத்திய நிதியமைச்சகம் புதிய பொருளாதார ஊக்க திட்டத்தை அறிவிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய நிதியமைச்சகத்திடம் ரிசர்வ் வங்கி உட்பட மத்திய அரசின் பல முக்கிய அமைப்புகள் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில் 2வது பொருளாதார ஊக்கத் திட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையில் உள்ளது.
மாநில அரசுக்கு அதிகாரம்
தற்போதைய சூழ்நிலையில் மத்திய அரசு 2020ஆம் ஆண்டை போல் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்படாமல் மாநில அரசுக்கு லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதிக்க உரிமை கொடுத்துள்ளது. இதேவேளையில் தொழிற்சாலை, வர்த்தக அமைப்புகள் கட்டுப்பாடுகள் உடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
MSME நிறுவனங்கள் தப்பித்தது
இதனால் MSME நிறுவனங்கள் 2020 லாக்டவுன் மூலம் அனுபவித்த கடுமையான வர்த்தக பாதிப்பை போல் இல்லாமல் வர்த்தக சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்பட பாதிப்பை எதிர்கொள்ளும். இதனால் வேலைவாய்ப்புகளில் பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது என கணிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நேற்று நடத்திய முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தின் வாயிலாக மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு அதிகம் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பு மருந்து பெறலாம் என அறிவித்துள்ளது.
4500 கோடி ரூபாய் நிதியுதவி
இதேவேளையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பை அதிகரிக்க அட்வான்ஸ் பேமெண்ட் ஆகச் சீரம் மற்றும் பார்த் பயோடெக் நிறுவனங்களுக்கு 4500 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
மாநில அரசு கையில்
இதுமட்டும் அல்லாமல் கொரோனா தடுப்பு மருந்தை வாங்கும் உரிமையை மத்திய அரசு, மாநில அரசு கைகளுக்குக் கொடுத்துள்ளது. இதனால் மாநில அரசு தனது விருப்பத்தின் படி எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம்.
இறக்குமதி வரி தள்ளுபடி
இதோடு வெளிநாட்டில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை இறக்குமதி செய்வதை எளிதாக்கும் பொருட்டுக் கோவிட் வேக்சின் மீது இருந்த இறக்குமதி வரியை நீக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாமல் தவித்து வரும் நிலையில் விரைவில் ஆக்சிஜன் அளவீட்டை 25 சதவீதம் அதிகரித்து அரசு நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளது.