டெல்லி: கொரோனா தாக்கத்தால் பெரும்பாலான மக்கள் இன்னும் நாடு முழுவதும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர் என்று தான் கூறவேண்டும். லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் நிறுவனங்கள் முழுமையாக செயல்பட ஆரம்பிக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.
ஆக வேலைக்கு செல்ல முடியாமல் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கென சில அறிவிப்புகளை மத்திய அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று சாமானியர்களுக்கு உதவும் வகையில், EPF எனப்படும் ஊழியர்களுக்கான வைப்பு நிதித் தொகையை ஜூன் மற்றும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு அரசே செலுத்த முடிவு எடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதன் மூலம் நாடு முழுக்க வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஊழியர்கள் செலுத்த வேண்டிய 12 சதவீத பங்கும், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 12 சதவீத பங்கும் சேர்த்து, மொத்தம் 24 சதவீத தொகையினை அரசே செலுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மார்ச் மாதத்திலிருந்தே பிஎஃப் தொகையை மத்திய அரசே செலுத்தி வரும் நிலையில், இது ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 72 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். இதற்காக மத்திய அரசுக்கு 4,860 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளது.
அரசின் இந்த சலுகையை பெற அதிகபட்சமாக 100 ஊழியர்கள் வரை பணியாற்றும் நிறுவனங்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். அதிலும் ஒரு நிபந்தனை உண்டு. அப்படி பணியாற்றும் ஊழியர்களில் 90 சதவீத ஊழியர்களின் மாத ஊதியம் 15,000 ரூபாய்க்கும் குறைவாக இருப்பது அவசியமாம். எப்படியோங்க ஊழியர்களுக்கு பலன் தரும் நல்ல விஷயம் தானே..
இந்த திட்டத்தோடு சேர்த்து நவம்பர் வரையில் ரேசனில் இலவச உணவு பொருட்கள் வழங்க வகை செய்யப்படும் வகையில் பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்திற்கும் மத்திய அமைச்சரை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications