உலக நாடுகளில் ரெசிஷன் குறித்த அச்சம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது, இதன் எதிரொலியாக ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா, டெஸ்லா உட்படப் பல பெரும் நிறுவனங்கள் ஊழியர்களை அடுத்தடுத்து பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது. இதன் வாயிலாக மற்ற நிறுவனங்களும் இந்த ரெசிஷன் அச்சத்தைப் பயன்படுத்தி ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
ரெசிஷன் குறித்த அச்சம் ஒருபக்கம் இருந்தாலும், தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் தேவையில்லாமல் அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் சேர்த்துவிட்டோமோ என்ற அச்சம் மற்றும் சந்தேகம் அதிகமாக உள்ளது.
இதைச் சரி செய்ய இந்த ரெசிஷன் அச்சத்தைப் பயன்படுத்தித் தற்போது பல நிறுவனங்கள் ஊழியர்கள் பணிநீக்கம் செய்தும், புதிய ஊழியர்களைப் பயணியில் சேர்ப்பதும் குறைத்துள்ளது. இதனால் யாருக்கெல்லாம் பாதிப்பு..?
வால்மார்ட் டக் மெக்மில்லன்
சமீபத்தில் வால்மார்ட் தனது காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது சிஇஓ டக் மெக்மில்லன் 2021ல் கொரோனா தொற்றுக்குப் பின்பு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து வெளிவர அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் சேர்த்த காரணத்தால் லாபத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது எனக் கூறியுள்ளார்.
டிக்டாக், ரெட்பின், ஜேபி மோர்கன்
கிட்டதட்ட இதைப் போன்ற கருத்துக்களைத் தான் தற்போது டிக்டாக், ரெட்பின், ஜேபி மோர்கன் போன்ற முன்னணி நிறுவனங்களும் அறிவித்துள்ளது. பெரு நிறுவனங்களுக்கே இந்த நிலைமை என்றால் சிறிய நிறுவனங்கள் படுமோசமான நிலையில் உள்ளது.
அமெரிக்க வேலைவாய்ப்பு
மே மாதம் மட்டும் அமெரிக்காவின் மொத்த வேலைவாய்ப்புச் சந்தையில் சுமார் 2.8 சதவீத ஊழியர்கள் அதாவது 43 லட்சம் பேர் பணிநீக்கம் அல்லது ராஜினாமா செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. ஆனால் ஜூன் மாதம் 3.7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது, இது பொருளாதார வல்லுனர்கள் கணித்தை விடவும் அதிகமாகவும்.
2000, 2008 இப்போ 2022
2000 ஆம் ஆண்டில் ஏற்பட்ட டாட் காம் பபுள், 2008 ல் ஏற்பட்ட நிதி நெருக்கடி ஆகியவற்றைப் போலவே தற்போது ரெசிஷன் அச்சம் உலக நாடுகளிலும், முன்னணி நிறுவனங்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது.
பணவீக்கம்
தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் வளரும் நாடுகளைக் காட்டிலும் வளர்ச்சி அடைந்த வல்லரசு எனப் பெயர் கொண்டு நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.
பொருளாதார வல்லுனர்கள்
சில மாதங்களுக்கு முன்னேற எலான் மஸ்க் உடன் சேர்ந்து பல முன்னணி பொருளாதார வல்லுனர்கள் ரெசிஷன் குறித்துப் பேசிய போது அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா உட்படப் பல முன்னணி நாடுகள் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளாமல் ரெசிஷனுக்குள் செல்வதற்கு வாய்ப்புகள் குறைவு என அறிவித்தனர்.
வட்டி உயர்வு
ஆனால் அதன் பின்பு பெரும்பாலான வல்லரசு நாடுகளில் பணவீக்கம் பல ஆண்டுக் காலம் அதிகரித்துச் சற்றும் எதிர்பார்க்காத வகையில் வட்டியை தாறுமாறாக அதிகரித்து வருகிறது, சமீபத்தில் ஐரோப்பிய மத்திய வங்கி 11 ஆண்டுக்கு பின்பு வட்டியை உயர்த்தியுள்ளது.
பெரும் நிறுவனங்கள்
இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்திப் பணப் பலம் கொண்ட பெரும் நிறுவனங்கள் தான் செய்த தவறுகளைச் சரி செய்ய முடிவு செய்து அடுத்தடுத்துப் பணிநீக்கம் அல்லது புதிய ஊழியர்களைச் சேர்க்கும் எண்ணிக்கையைக் குறைக்கத் துவங்கியுள்ளது.
ஊழியர்கள் உஷார்
இதன் மூலம் தற்போது நடக்கும் பணிநீக்கம் செலவுகளைக் குறைப்பதைத் தாண்டி அதிக லாபத்தைப் பார்க்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இதனால் சரியாக வேலை செய்யாத ஊழியர்களைத் தாண்டி, தேவையில்லாமல் இருக்கும் உபரி ஊழியர்கள், அதிகச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் கூடப் பணிநீக்கம் செய்யப்படலாம்.