இந்தியாவில் நாளுக்கு நாள் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடைக் கோடி கிராமங்கள் முதல் கொண்டு மெட்ரோ நகரங்கள் வரையில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது பூதாகரமாக உருவெடுத்து வருகிறது.
சொல்லப்போனால் பல துறைகளும் கொரோனா காலகட்டத்தில் முடங்கியிருந்த நிலையில், அந்த காலகட்டத்தில் நன்கு மேம்பட்ட துறைகளில் ஆன்லைன் சில்லறை வர்த்தகமும் ஒன்று எனலாம்.
ஏனெனில் மக்கள் பாதுகாப்பு காரணமாகவும், சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாகவும் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்த நிலையில், அமேசான் ஃப்ளிப்கார்ட், ஜியோமார்ட், க்ரோபர்ஸ் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் கல்லா கட்டின.
ஆன்லைனில் ஆர்டர்
மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, டெக்னாலஜிகள் வளர்ந்து வரும் நிலையில், பொருட்கள் வாங்க கடை, டிபார்மெண்டல் ஸ்டோர்ஸ், ஷாப்பிங் மால்கள் என மாறி, தற்போது இது ஒரு போன் செய்தாலோ, ஆன்லைனில் ஆர்டர் செய்தாலோ போதும் வீட்டிற்கே உங்களுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் தேடி வரும் என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது.
மளிகை பொருட்கள் ஹோம் டெலிவரி
ஏனெனில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாமல், தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வந்தனர். அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் நாட்கணக்கில் நேரம் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் இன்று உள்ளூர் சிறுசிறு டிபார்ட்மெண்டஸ் ஸ்டோர்கள் கூட ஹோம் டெலிவரியை சில மணி நேரங்களில் செய்து வருகின்றன.
10 நிமிடத்தில் பொருட்கள் டெலிவரி
ஆக இவர்களுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில், க்ரோபர்ஸ் நிறுவனம் சமீபத்தில் 10 நிமிடங்களில் டெலிவரி என்ற ஆப்ஷனை கொண்டு வந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது எனலாம். ஏனெனில் 10 நிமிடங்கள் டெலிவரி என்பது, இதை எடுத்துச் செல்லும் டெலிவரி பார்ட்னர்கள் நெருக்கடியான சாலைகளில் மிக வேகமாக செல்லும் நிலைக்கு தள்ளப்படலாம். இதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற விமர்சனங்கள் வெளியாகியது.
சர்ச்சைக்கு விளக்கம்
க்ரோபர்ஸ் நிறுவனத்தின் தலைவர் அல்பிந்தர் திண்ட்சா, தனது அறிக்கையில், க்ரோபர்ஸ் நிறுவனத்தின் 10 நிமிடங்களில் டெலிவரி திட்டத்தில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதனை பற்றி நான் பேச விரும்புகிறேன். 10 நிமிடங்களில் பொருட்களை டெலிவரி செய்ய நாங்கள் எங்கள் ரைடர்களை வேகமாக வாகனங்களை ஓட்ட சொல்லவில்லை.
தெளிபடுத்த விருப்பம்
இதன் மூலம் நாங்கள் அவர்களை போக்குவரத்து விதிகளை மீறவும் தூண்டவில்லை. நாங்கள் மனிதாபிமானமற்று இருப்பதாக கூறுகின்றனர். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற விமர்சனங்கள் எழுகின்றன. இந்த விமர்சனங்கள் மிக வருத்தத்தினை அளிக்கிறது. இதனை நான் தெளிபடுத்த விரும்புகிறேன்.
எப்படி சாத்தியம்
வாடிக்கையாளார்களிடமிருந்து பங்குதாரர்கள் 2 கிலோமீட்டருக்குள் கடைகளை கொண்டிருப்பதால், 10 நிமிடங்களில் மளிகை பொருட்களை எங்களால் வழங்க முடியும். மேலும் கடையில் ஊழியர்கள் பல பொருட்களை வெறும் 2.5 நிமிடங்களில் பேக் செய்ய முடியும். ஆக எங்களால் விரைவில் டெலிவரி செய்ய முடியும்.
90% ஆர்டர்கள் சக்சஸ்
எங்களின் பங்குதாரர்களின் கடைகள், எங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து 1 கிலோமீட்டர் தொலை மிக அடர்த்தியாக உள்ளன. டெல்லியில் எங்களிடம் 60+ கடைகளும், குர்கானில் ஏற்கனவே 30+ கடைகளும் உள்ளன. எங்கள் கடைகள் மிக அடர்த்தியாக உள்ளன. ஆக எங்கள் ரைடர்கள் 10 கிலோமீட்டர் வேகத்தில் வாகனத்தினை இயக்கினாலும், 90% ஆர்டர்களை 15 நிமிடங்களில் வழங்க முடியும்.
விபத்தி ஏற்படவில்லை
ஆக நாங்கள் எங்கள் ரைடர்களை வேகமாக செல்ல ஊக்கப்படுத்தவில்லை. அவர்கள் சொந்த வேகத்தில் தான் செல்கின்றனர். நாங்கள் இந்த 10 நிமிட டெலிவரியை தொடங்கிய இந்த 2 மாதங்களில் எந்த விபத்துகளும் ஏற்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.