மதிப்புக் கூட்டு வரி நடைமுறையில் இருந்தபோது, தமிழ்நாடு அடைந்த வருவாய் வளர்ச்சியை, சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் எட்ட இயலவில்லை.
இதுமட்டுமின்றி, கோவிட் பெருந்தொற்று அனைத்து மாநிலங்களின் நிதிநிலையைப் பெருமளவில் பாதித்துள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீடு
இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை ஒன்றிய அரசு வழங்கும் கால வரையறை 30.6.2022 ஆம் நாளன்று முடிவுக்கு வருகிறது. இதனால், வரும் நிதியாண்டில், சுமார் 20,000 கோடி ரூபாய் நிதி இழப்பினை தமிழ்நாடு சந்திக்க நேரிடும்.
2 ஆண்டுகள் நீட்டிப்பு
கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்க நிலையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வருவாய் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாத காரணத்தால், இந்த இழப்பீட்டை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு ஒன்றிய அரசிற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்த நியாயமான கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி சாய்க்கும் என நம்புகிறேன் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின்
நாட்டின் மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் பங்கு 6.12 சதவீதமாகும். இதேபோல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு ஏறத்தாழ 10 சதவீதமாகும். இவற்றிற்கு ஏற்றவாறு ஜிஎஸ்டி வரி வருமானத்தில் நிதிப்பகிர்வை செய்ய வேண்டும், ஆனால் மத்திய நிதிக்குழுக்கள் தமிழ்நாட்டிற்கு ஜிடிபி அளவிற்கு இதை அளிக்கவில்லை.
நிதிக்குழுவின் பரிந்துரை
15வது மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு இடையேயான நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு வெறும் 4.079 சதவீதமாகும். 15வது மத்திய நிதிக்குழு ஐந்தாண்டுக் காலத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியமாக மொத்தம் 21,246 கோடி ரூபாயைப் பரிந்துரைத்துள்ளது.
மானியங்கள்
இத்தொகையானது, 14வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 17,010 கோடி ரூபாய் மானியங்களைக் காட்டிலும் குறைந்த அளவிலேயே அதிகரிக்கப்பட்டுள்ளது எனப் பழனிவேல் தியாகராஜன் கூறினார். மாநிலத்திற்குக் குறிப்பிட்ட மானியங்களையும், துறைகளுக்குக் குறிப்பிட்ட மானியங்களையும் 15வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது.
ஒன்றிய அரசுத் திட்டங்கள்
இத்தொகையை நடைமுறையிலுள்ள ஒன்றிய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுடனும் (Centrally Sponsored Schemes) ஒன்றிய துறைத் திட்டங்களுடனும் (Central Sector Schemes) இணைக்காமல், தனியாக வழங்க வேண்டும் என வலியுறுத்துவதாகத் தமிழகப் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.