நாடு முழுவதும் இந்திய மக்கள் 76வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் கோடிக்கணக்கானோர் தங்களது வீட்டின் முன் சுதந்திரக் கொடியை பறக்க விட்டு தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பலர் தங்களது இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் தேசிய கொடியை ஏற்றி வருகிறார்கள் என்பது தெரிந்ததே.
அந்த வகையில் குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய ஆடம்பரமான ஜாகுவார் எக்ஸ்எஃப் காருக்கு இந்திய தேசிய கொடியின் மூவர்ணத்தை பெயிண்ட் அடித்துள்ளார். இந்த காரின் புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆடம்ப காரில் மூவர்ணம்
குஜராத்தைச் சேர்ந்த சித்தார்த் தோஷி என்ற இளைஞர் தனது 71.60 லட்சம் மதிப்பிலான ஆடம்பரமான ஜாகுவார் எக்ஸ்எஃப் காருக்கு இந்தியாவின் தேசிய கொடியில் உள்ள மூவர்ணத்தால் பெயிண்ட் அடித்துள்ளார். 'ஹர் கர் திரங்கா' என்ற பிரச்சாரத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சித்தார்த் தோஷி தனது காருக்கு இந்திய தேசியக்கொடியின் வர்ணங்களை சுமார் 2 லட்சம் செலவு செய்து பெயிண்ட் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரத் - டெல்லி
அதுமட்டுமின்றி இந்த காரில் அவர் சூரத்தில் இருந்து டெல்லிக்கு இரண்டு நாட்களில் ஏறக்குறைய 1500 கிலோமீட்டர் பயணம் செய்து, செல்லும் வழியெல்லாம் தேசியக் கொடி மற்றும் 'ஹர் கர் திரங்கா' பற்றிய பிரச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.
ரூ.2 லட்சம் செலவு
சித்தார் தோஷி தனது ஜாகுவார் எக்ஸ்எஃப் காரின் முன்பகுதியில் காவி நிறத்தாலும், பானெட் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் வெள்ளை நிறத்தாலும், காரின் பின்புறத்தில் பச்சை நிறத்தாலும் வர்ணம் தீட்டி உள்ளார். காரையே தேசிய கொடியாக மாற்றுவதற்கு அவர் இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்ததாக கூறியுள்ளார்.
'ஆசாத் கா அம்ரித் மஹோத்சவ்'
மேலும் சித்தார்த் தோஷி தனது காரை பாராளுமன்ற அருகே ஓட்டும் வீடியோவும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காரில் 'ஆசாத் கா அம்ரித் மஹோத்சவ்' என்று எழுதப்பட்டு இருப்பதையும் காணலாம்.
தேசியப்பற்று
இந்திய மக்கள் அனைவரும் இந்திய தேசிய கொடியை வீட்டில் ஏற்ற வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் 'ஆசாத் கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பெயரில் பிரச்சாரம் கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில் சித்தார்த் தோஷி தனது பங்கிற்கு தனது காரில் இந்த பிரச்சார வாசகத்தை எழுதி நாட்டு மக்களிடம் தேசியப்பற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
மோடி-அமித்ஷாவை சந்திக்க விருப்பம்
இது குறித்து சித்தார்த் தோஷி செய்தியாளர்களிடம் பேசியபோது 'ஆசாத் கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பிரச்சாரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் இரண்டு நாட்களில் எனது காரில் சூரத்தில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளேன். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.