இந்திய ஐடி ஊழியர்களின் மிகப்பெரிய கனவாக இருக்கும் ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகப்படியான வெளிநாட்டுத் திட்டங்கள் கிடைத்துள்ள போதிலும், ஹெச்1பி விசா வைத்துள்ளவர்கள் எண்ணிக்கை 10 வருடத்தில் மோசமான நிலையை அடைந்துள்ளது.
ஹெச்1பி விசா
அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்காக அதிகளவிலான வெளிநாட்டவர்கள் நம்பியிருக்கும் ஹெச்1பி விசா வைத்துள்ளவர்கள் எண்ணிக்கை 9 சதவீதம் குறைந்து 10 வருடத்தில் மோசமான நிலையை அடைந்துள்ளது என அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவுகளை ஆய்வு செய்த ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
லாட்டரி தேர்வு
சமீபத்தில் கூட ஹெச்1பி விசா அளிக்கப் போதுமான விண்ணப்பங்கள் இல்லாத காரணத்தால் அமெரிக்கக் குடியுரிமை அமைப்பு 3வது முறையாகப் பல்வேறு தளர்வுகளுடன் லாட்டரி தேர்வை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இன்ஜினியரிங் மற்றும் கணக்கியல்
குறிப்பாக இன்ஜினியரிங் மற்றும் கணக்கியல் பிரிவில் இருக்கும் ஹெச்1பி விசா உரிமையாளர்கள் எண்ணிக்கை 12.6 சதவீதம் வரையில் இந்தச் செப்டம்பர் 2021ல் குறைந்துள்ளது. 2வது வருடமாக இப்பிரிவில் இருக்கும் ஹெச்1பி விசா உரிமையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தெரிகிறது.
கொரோனா தொற்று
இந்த நிலைக்கு முதலும் முக்கியக் காரணம் கொரோனா தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் இருந்த பயணம் மற்றும் விசா தடை தான். கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து உலக நாடுகள் அடுத்தடுத்து தனது வான்வெளி போக்குவரத்துக்கான அனுமதியை விரிவாக்கம் செய்து வந்த வேளையில் ஒமிக்ரான் வைரஸ் வெடித்துள்ளது.
2 வருடம் தொடர் சரிவு
2011 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தின் தரவுகளை ப்ளூம்பெர்க் ஆய்வு செய்த போது ஹெச்1பி விசா உரிமையாளர்கள் எண்ணிக்கை 2020 உடன் ஒப்பிடுகையில் 2021ல் இதன் எண்ணிக்கை 9 சதவீதமும் 2019ஐ ஒப்பிடுகையில் 2021ல் 17 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
டொனால்டு டிரம்ப்
இந்தச் சரிவுக்குக் கொரோனா ஒருபக்கம் காரணமாக இருந்தாலும், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா காலக்கட்டத்தில் அமெரிக்கர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஹெச்1பி மற்றும் இதர முக்கிய விசா வைத்துள்ள வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்கா வருவதற்குத் தடைவிதித்தார். இதுவும் இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளது.