நடப்பு ஆண்டில் கொரோனாவின் தாக்கத்தினால், நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையும் பெரும் பின்னடைவையே சந்தித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக ஐடி துறையானது பெருத்த அடி வாங்கியுள்ளது எனலாம்.
பாதிக்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் அதன் வருவாய் பாதிக்கும் என ஒரு கணிப்பில் தெரிவித்து இருந்தன.
மற்ற துறைகளை ஒப்பிடும்போது ஐடி துறையில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிந்து வந்தாலும், பல நிறுவனங்களில் வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதி இல்லாமை. பல சிறு நிறுவனங்களுக்கு போதிய திட்டங்கள் கிடைக்காமை, ஒப்பந்தங்கள் புதுப்பிக்காமை என பல காரணங்களால் பணி நீக்கம் செய்து வருகின்றன.
பணியமர்த்தல் இல்லை
இதற்கிடையில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட நடப்பு ஆண்டில் பணியமர்த்தலே இல்லை என்றும் கூறி வருகின்றன. மாறாக சில நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வருகின்றன. ஏற்கனவே இத்துறையில் வருவாய் இழப்பும் பணிநீக்கங்களும் அதிகமாக இருந்த நிலையில், தற்போது கொரோனாவால் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
புதிய பணியமர்த்தல் முடங்கலாம்
இதன் காரணமாக ஊழியர்கள் பலர் தங்களது வேலையை இழந்துள்ளனர். வரும் காலங்களில் புதிய வேலைவாய்ப்புகளும் மந்தமாகவே இருக்கும் என்று அஞ்சப்படுவதாக நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கிராண்ட் தார்ண்டன் என்ற ஆலோசனை நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு 10 ஐடி நிறுவனத்திலும் 4 ஐடி நிறுவனங்கள் 30% வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறுகிறது.
லாபம் வீழ்ச்சி
முன்னதாக பொருளாதார நெருக்கடி சமயத்தில் இருந்த பாதிப்பை விட, இப்போது உள்ள பாதிப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. ஆக இப்படி ஒரு நிலையில் நாட்டின் முன்னணி சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில், அதன் நிகர லாபத்தில் 14 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 7008 கோடி ரூபாயாக லாபம் கண்டுள்ளதாக அறிவித்திருந்தது.
கேம்பஸ் இண்டர்வியூ தாமதமாகலாம்
நாட்டில் கொரோனாவின் தாக்கம் காரணமாக கல்லூரிகளில் நடக்க வேண்டிய செமஸ்டர் தேர்வுகள் நடக்கவில்லை. அதோடு கேம்பஸ் இண்டர்வியூக்களும் நடக்க இயலாத நிலை இருந்து வருகிறது. டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டில் 40,000 பேரை கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வு செய்திருந்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் கொரோனா வைரஸ் காரணமாக கேம்பஸ் இண்டர்வியூக்கள் தள்ளி வைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அனுபவம் வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு
அதோடு lateral hiring எனப்படும் அனுபவம் மிக்க திறமை வாய்ந்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதனை முடக்கியிருந்த நிலையில், தற்போது மும்பையினை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், வெளியிலிருந்து அனுபவம் வாய்ந்த பணியாளர்களை தேர்தெடுப்பதாகக் கூறியுள்ளது. ஆக மொத்தத்தில் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு வாய்ப்புகள் உள்ளது என்பது கவனிக்கதக்கது.
அனுபவம் வாய்ந்த பணியமர்த்தலுக்கு திட்டம்
மேலும் புதிய கூட்டாளர்களை சேர்ப்பதை தவிர்த்து, lateral பணியமர்த்தலை செய்ய தேர்தெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம். கடந்த ஆண்டில் நிலவி வந்த நிச்சயமற்ற சூழல் காரணமாக இந்த லேட்டரல் பணியமர்த்தல் முடக்கப்படும் என்றும் கூறியிருந்தோம். ஆனால் நிலுவையில் உள்ள அனைத்து சலுகைகளையும் நாங்கள் மதிக்கிறோம் என்றும், இந்த நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுக்கு பின்னர் இந்த அறிக்கை வந்துள்ளது.
பணியமர்த்தல் முடங்கலாம்
இதே நிபுணர்கள் மத்தியில் முன்னணி ஐடி நிறுவனங்கள் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கிடையே பணியமர்த்தல் முடக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது. எனினும் இது கடந்த ஆண்டை போல இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் அமெரிக்காவின் ஹெச் 1பி விசா தடையானது நியாயமற்றது என்றும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது.