இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள், கொரோனா பாதிப்புக் காரணமாகப் புதிய வர்த்தகம் ஏதும் இல்லாமலும், அமெரிக்கா வர்த்தகச் சந்தை எப்போதும் மீண்டும் வரும் எனப் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைக்கும் மத்தியில் இயங்கி வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பின் காரணமாகப் பல நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில் ஐடி நிறுவனங்கள் பணிநீக்கம் எதுவும் அறிவிக்காமல், சம்பள உயர்வு மற்றும் போனஸ் தொகையை ரத்து செய்துள்ளது.
ஆனால் ஹெச்சிஎல் நிறுவனம் தனது 1.5 லட்சம் ஊழியர்களுக்கு எவ்விதமான சம்பள குறைப்பையும் அறிவிக்காமல், கடந்த வருடத்திற்கான போனஸ் தொகையும் கொடுப்பதாக அறிவித்துள்ளது.
ஹெச்சிஎல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு சக ஐடி நிறுவனங்களும், ஐடி ஊழியர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள்
கொரோனா பாதிப்பின் காரணமாகப் பன்னாட்டு நிறுவனங்கள் புதிய சேவையில் முதலீடு செய்வதையும், ஐடி சேவைகளில் செலவுகளைக் குறைப்பதுமாக இருக்கிறது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இதிலும் குறிப்பாக அமெரிக்க வர்த்தகத்தை நம்பியிருக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள் அடுத்த 6 மாதத்தில் மிகவும் மோசமான வர்த்தகத்தை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச்சிஎல்
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கான சம்பள உயர்வையும், போனஸ் ஆகியவற்றை இந்த வருடம் ரத்து செய்துள்ள நிலையில், ஹெச்சிஎல் நிறுவனம் மட்டும் தனது 1,50,000 ஊழியர்களுக்கான சம்பளத்தில் எவ்விதமான குறைப்பையும் அறிவிக்காமல் முழுச் சம்பளத்தைக் கொடுக்க முடிவு செய்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ஊழியர்களுக்குக் கடந்த வருடத்தின் செயல்பாட்டுக்கான போனஸ் தொகையும் கொடுப்பதாக அறிவித்துள்ளது ஹெச்சிஎல் நிர்வாகம்.
வேலைவாய்ப்பு
ஹெச்சிஎல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 15,000 பிரஷ்ஷர்களுக்கு எவ்விதமான சந்தேகமின்றி வேலைவாய்ப்புக் கொடுப்பதாக அறிவித்துள்ளது. இது கல்லூரி முடிந்து வெளியில் வரும் மாணவர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.
ஹெச்சிஎல் அறிவிப்பு
கொரோனாவால் வர்த்தகம் இயங்கும் முறை மாறியுள்ளது தவிர எங்களது பிராஜெக்ட்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. ஆனால் புதிய பிராஜெக்ட்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் நிறுவனத்தில் 5000 பேரைப் புதிதாகப் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் அது கொரோனா பாதிப்பு இல்லாத இடத்திலும், குறைவாக இருக்கும் நகரங்களில் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைமை மனிதவள பிரிவு அதிகாரி விவி அப்பாராவ் தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு
ஜூலை மாதம் நெருங்கிவிட்ட நிலையில் வருடாந்திர சம்பள உயர்வு பணிகள் நொய்டா தலைமை அலுவலகம் விரைவில் துவங்கும் என விவி அப்பாராவ் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊழியர்கள் வெளியேற்பு விகிதம் சாதாரணமாக 16-17 சதவீதம் இருக்கும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் இதன் அளவு 50 சதவீதம் குறைந்துள்ளது என்றும் விவி அப்பாராவ் தெரிவித்துள்ளார்.