முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி வங்கியின், டிஜிட்டல் சேவை தடைப்பட்டதற்கான காரணத்தினை கேட்ட நிலையில், தற்போது ஹெச்டிஎஃப்சி வங்கி புதிய கிரெடிட் கார்டு, உள்ளிட்ட சில சேவைகளுக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி,.
குறிப்பாக டிஜிட்டல் 2.0 திட்டத்தில் இருக்கும் புதிய டிஜிட்டல் திட்டங்களை அறிமுகம் செய்வதை நிறுத்தவும், ஐடி சேவைகள் மூலம் வர்த்தகம் செய்யும் இதர முயற்சிகளை நிறுத்தவும் ரிசர்வ் வங்கி அதிரடியாக தற்காலிக தடை விதித்துள்ளது.
இதற்கிடையில் இவ்வங்கி பங்கின் விலையானது பெரும் சரிவினைக் கண்டு வருகிறது. சரி ஏன் இந்த சரிவு? என்ன காரணம் வாருங்கள் பார்க்கலாம்.
ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு பெரும் பின்னடைவு
ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி உத்தரவால், டிஜிட்டல் சேவை வர்த்தகத்திற்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிலும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் முன்னணி வணிகமான கிரெடிட் கார்டு வணிகத்தினை தடை செய்துள்ளது, இது ஹெச்டிஎஃப்சி வங்கியின் டிஜிட்டல் வணிகத்தினை பெரிதும் பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் சேவைகள் தடை
சரி என்ன தான் காரணம் ரிசர்வ் வங்கி ஏன் இப்படி அதிரடி முடிவினை எடுத்துள்ளது. அதிலும் நாட்டின் மிகப்பெரிய முன்னணி தனியார் வங்கியின் மீது, இப்படி ஒரு நடவடிக்கை என்ன காரணம்? கடந்த நவம்பர் 21ம் தேதியன்று ஹெச்டிஎஃப்சி வங்கியின் டிஜிட்டல் சேவைகள் தடை பெற்றதுக்கு என்ன காரணம் என்று கேட்ட நிலையில், வங்கி தரப்பில் அது பிரைமரி டேட்டா சென்டரில் ஏற்பட்ட மின்சார பிரச்சனை என்றும் கூறியுள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கு விலை
ஆனால் கடந்த இரு வருடங்களாக இது போன்ற பிரச்சனைகள் வருவதாகவும் ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தான் இபப்டி ஒரு அதிரடியான நடவடிக்கையினை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆக இதற்கிடையில் தான் ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கின் விலை, பிஎஸ்இ-யில் கிட்டதட்ட 2 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1382.45 ரூபாயாக காணப்படுகிறது.
எவ்வளவு சரிவு?
இவ்வங்கி பங்கின் விலையானது இன்று காலை தொடக்கத்தில் 1420.10 ரூபாயாக தொடங்கிய நிலையில், தற்போதும் பலத்த சரிவினைக் கண்டு காணப்படுகிறது. இதே நேற்றைய முடிவு விலையானது 1406.95 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதிகபட்சமாக இதுவரையில் 1379.05 ரூபாய் வரையில் இப்பங்கின் விலை குறைந்து, தற்போது சற்று ஏற்றம் கண்டு காணப்படுகிறது.