இந்தியாவில் பெருமளவிலான மருத்துவச் சேவை தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்பின் ஆதிக்கத்தில் உள்ளது. குறிப்பாக நகரங்களில் இதன் ஆதிக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் நாட்டின் மொத்த புறநோயாளி சிகிச்சையில் 74 சதவீதமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அளிக்கப்படும் (உள்ளிருப்பு சிகிச்சை) சிகிச்சையில் 65 சதவீதம் தனியார் துறை ஆதிக்கம் செய்கிறது.
மருத்துவத்துறைக்குக் கட்டுப்பாட்டு ஆணையம்
இப்படி இருக்கும்போது ஹெல்த்கேர் துறை சார்ந்த கொள்கைகளை வடிவமைக்கும் போது தரவுகள் போதுமானதாக இருக்காது. எனவே இத்துறையைக் கட்டுக்குள் கொண்டு வர ஒரு கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மருத்துவக் கட்டமைப்பு
2004ல் பிரிட்டன் நாட்டில் நேஷனல் ஹெல்த் சர்வீஸ் அமைப்பு Quality and Outcomes Framework (QOF) என்ற கட்டமைப்பை உருவாக்கி மருத்துவச் சிகிச்சை முறை முதல் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் தரம், திறன் மற்றும் சேவை
ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறது என எக்னாமிக் சர்வே அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிலை
மக்களின் சுகாதாரம் மற்றும் உடல்நல ஆரோக்கியத்தை முக்கியத்துவமாகக் கொண்டு போடப்படும் பட்ஜெட் அறிக்கைகளில் இந்திய அரசு 189 நாடுகளில் 179வது இடத்தில் உள்ளது.
மோடி அரசு சமீபத்தில் அறிவித்துள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பல கோடி மக்கள் குறைந்த கட்டணத்திலும், ஏழை மக்கள் இலவசமாகவும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனவும்
பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது,
ஹெல்த்கேர் துறை கூடுதல் பட்ஜெட்
இந்தியாவில் பல பணக்கார மாநிலங்கள் ஹெல்த்கேர் துறைக்கு மிகவும் குறைவான அளவிலேயே செலவு செய்கிறது, இதை உடனடியாக உயர்த்த வேண்டும், மேலும் மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் தற்போது 30 முதல் 65 சதவீதம் தங்களது சொந்த பணத்தைக் கொண்டு சிகிச்சை பெறுகிறார்கள், இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் ஹெல்த்கேர் துறைக்குக் கூடுதலாகப் பட்ஜெட் ஒதுக்குவதன் மூலம் 2.5 முதல் 3 சதவீதம் வரையில் இந்த அளவீட்டைக் குறைக்க முடியும் எனப் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் மருத்துவச் சேவை
மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் வளர்ந்து வரும் டிஜிட்டல் சேவைகளின் உதவியுடன் telemedicine துறையில் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும். இதுமட்டும் அல்லாமல் புதிதாக டிஜிட்டல் ஹெல்த் திட்டத்தை உருவாக்க வேண்டும்
எனவும் பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.