சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டிக்கான ஏலம் 48 ஆயிரம் கோடிக்கு மேல் நடந்தது என்பதும் இந்த ஏலத்தை எடுப்பதற்காக இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி உலகில் உள்ள முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டன என்பதையும் பார்த்தோம்.
அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் போட்டிகளில் ஒளிபரப்பு உரிமை 48 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் நிலையில் ஐபிஎல் தொடருக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட பாகிஸ்தான் பிரிமியர் சூப்பர் லீக் போட்டிகளின் ஏலத்தை ஒப்பிடும்போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆகிய இரண்டின் ஒளிபரப்பு உரிமையின் தொகையை ஒப்பிட்டு தற்போது பார்ப்போம்.
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை
கடந்த வாரம் மும்பையில் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பும் உரிமைக்கான ஏலம் நடைபெற்றது என்பதும் 2023 முதல் 2027 வரையிலான ஐபில் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான மொத்த ஏலத்தொகை ரூ.48390.52 என்பதும், ஒரு போட்டியை ஒளிபரப்புவதற்கு 115.4 கோடி ரூபாய் வரை எட்டியது என்பதும் இது கிரிக்கெட் உலகை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக விளையாட்டு துறையின் கவனத்தை ஈர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் - பிஎஸ்எல்
ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியை ஒளிபரப்ப 115.4 கோடி ரூபாய் வரை ஏலம் போன நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியை 2022-23 ஆண்டுக்கான தொடரில் ஒரு போட்டியை ஒளிபரப்ப வெறும் ரூ.2.76 கோடி மட்டுமே ஏலம் போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலீஷ் பிரீமியர் லீக்
உலகின் மிகவும் பிரபலமான கால்பந்து அணிகளில் ஒன்றான இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரை ஒளிபரப்புவதற்கு கூட 86 கோடி ரூபாய்தான் ஏலம் போனது என்ற நிலையில் அதைவிட அதிகமாக ஐபிஎல் போட்டியின் ஏலம் போய் இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா
பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இது குறித்து கூறிய போது இந்தியன் பிரீமியர் லீக் தற்போது உலக அளவில் இரண்டாவது அதிக லாபம் தரும் விளையாட்டு நிறுவனமாக உயர்ந்து உள்ளதை பார்த்து பெருமைப்படுகிறோம் என்று கூறியுள்ளார். உலகில் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியின் ஒளிபரப்பும் இவ்வளவு அதிகமான விலைக்கு விற்கப்படவில்லை என்றும் ஐபிஎல் தொடர் இன்று உலகின் இரண்டாவது மதிப்புமிக்க விளையாட்டு என்ற பெருமை பெற்றுள்ளதை நான் கிரிக்கெட் ரசிகர்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகள்
வெறும் 15 ஆண்டுகளில் ஐபிஎல் தொடர் உலக அளவில் பிரபலமாகி விட்டது என்றும் உலகில் பிரபலமாக இருக்கும் இங்கிலீஷ் பிரீமியர் லீக், மேஜர் லீக் பேஸ்பால் (எம்எல்பி) மற்றும் தேசிய கூடைப்பந்து சங்கம் (என்பிஏ) ஆகியவற்றை விட ஐபிஎல் போட்டி முன்னேறி உள்ளது என்றும் ஜெய்ஷா கூறியுள்ளார். உலகின் இரண்டாவது அதிக வருமானம் தரும் ஒரு விளையாட்டு சொத்தாக ஐபிஎல் மாறியிருப்பது இந்தியர்கள் அனைவருக்குமே பெருமையான தருணம் என்றும் ஜெய்ஷா கூறியுள்ளார்.
எட்டு அணிகள்
கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதில் எட்டு அணிகள் இடம் பெற்றன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய எட்டு அணிகளுக்கும் 2023-2027ஆம் ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமையில் கிடைத்த தொகையில் இருந்து ஒவ்வொரு அணிக்கும் சுமார் 3000 கோடி வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீரர்களுக்கு பணம்
அதுமட்டுமின்றி வருவாயின் ஒரு பகுதியை வீரர்கள், மாநில சங்கங்கள், ஊழியர்களுக்கும் செல்லும் என்பதும் குறிப்பாக ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
நெருங்க முடியாத இலக்கு
இந்தியாவை தனது போட்டி நாடாக கருதிக்கொண்டு ஐபிஎல் தொடருக்கு போட்டியாக பிஎஸ்எல் தொடரை ஆரம்பித்து உள்ள பாகிஸ்தான், இரு தொடருக்கும் கிடைத்த ஏலத்தொகையை கணக்கில் கொண்டு இனியாவது ஐபிஎல் என்பது நெருங்க முடியாத இலக்கு என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ளும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.