ஒரு காலத்தில் 42 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 6வது பெரும் பணக்காரராக இருந்த அனில் அம்பானியின் சொத்து மதிப்பு இன்று ஜீரோ என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் அதுதான் உண்மை.
பிரிட்டன் வழக்கு
சீன தொழிற்துறை மற்றும் வர்த்தக வங்கியின் மும்பை கிளை, சீன வளர்ச்சி வங்கி மற்றும் சீனா-வின் EXIM வங்கி ஆகிய 3 வங்கிகள் அனில் அம்பானி-க்கு மறுசீரமைப்பு கடன் கொடுத்தது அதற்காக அனில் அம்பானி உத்தரவாத கையெழுத்தும் செய்தார். ஆனால் அந்தக் கடனை திருப்பிக் கொடுக்க முடியாத காரணத்தால் சீன வங்கிகள் இணைந்து பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கின் விவாதத்தில் அனில் அம்பானி, "தன்னிடம் பணம் இல்லையென்றும், தனது சொத்து மதிப்புப் பூஜ்ஜியம்" என்று தெரிவித்துள்ளார். அனில் அம்பானியின் இந்தப் பேச்சு இந்திய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதர சொத்துக்கள்
இதோடு அனில் அம்பானிக்குச் சொந்தமாக இருக்கும் 3.2 பில்லியன் டாலர் மதிப்பிலான கார்கள், தனியார் ஜெட், தனது மனைவி டினா அம்பானிக்குப் பரிசாகக் கொடுத்த ஹெலிக்காப்டர், மும்பை கடற்கரையின் Cuffe Paradeல் இருக்கும் 2 அடுக்கு வீடு குறித்துக் கேள்வி எழுந்த போது, "அவை அனைத்தும் நிறுவனத்தின் பெயரில் தான் உள்ளது. இதனால் என்னுடைய சொத்து என்று எதுவும் இல்லை" என அனில் அம்பானி தெரிவித்தார்.
ஜீரோ
42 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 6வது பணக்காரராக இருந்த அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 2012ல் வெறும் 7 பில்லியன் டாலராகக் குறைந்தது. இதன் பின்பு அனில் அம்பானி தலைமையிலான நிறுவனங்கள் செய்த முதலீடுகளும், வர்த்தகங்களும் பெரிய அளவிலான வளர்ச்சி அடையாத காரணத்தால் மொத்த சொத்து மதிப்பு வெறும் 89 பில்லியன் டாலராக 2019ல் குறைந்து.
இதனால் தனது தனிப்பட்ட சொத்து மதிப்பு ஜீரோவை தாண்டி தற்போது 305 மில்லியன் டாலர் கடனில் உள்ளார் அனில் அம்பானி.
என்ன நடந்தது..?
2002ஆம் ஆண்டுத் திருபாய் அம்பானி மறைவிற்குப் பின் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் இரண்டாக உடைந்தது. அப்போது அனில் அம்பானிக்கு மிகவும் வேகமாக வளர்ச்சி அடைய வாய்ப்பு அதிகமாக இருக்கும் டெலிகாம், நிதி சேவைகள், எனர்ஜி மற்றும் இன்பரா ஆகிய துறை சார்ந்த வர்த்தகங்களைப் பெற்றார்.
முகேஷ் அம்பானிக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு, பெட்ரோகெமிக்கல், சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தித் துறை சொத்துக்கள் கிடைத்து. சொத்துப் பிரிக்கப்பட்ட போது இருவரின் சொத்து மதிப்புகளும் கிட்டதட்ட ஒரே அளவில் தான் இருந்தது. ஆனால் வேகமாக வளர்ச்சி அடைய கூடிய வர்த்தகத் துறைகள் அனைத்தும் அனில் அம்பானி பெற்று இருந்த காரணத்தால் அடுத்தத் திருபாய் அம்பானி அனில் அம்பானியாகத் தான் இருக்கும் எனப் பேசப்பட்டது.
2008
2002ஆம் ஆண்டுச் சொத்து பிரித்த பின்பு, தொடர் வர்த்தக வளர்ச்சியின் மூலம் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 2008ல் 42 பில்லியன் டாலராக உயர்ந்து உலகின் 6வது பெரும் பணக்காரராக உயர்ந்தார்.
பிரச்சனை
டெலிகாம், பவர், இன்பரா போன்ற வேகமாக வளர்ச்சி அடையும் துறை வர்த்தகம் அனில் அம்பானி கையில் இருந்து, முறையற்ற நிர்வாகம், குறைந்த காலகட்டத்தில் இலக்குகள் மாற்றம், வர்த்தக விரிவாக்கத்திற்காக அதிகளவிலான கடன்கள், பல டீல்களை முடிக்காமல் போனது என 18 வருட காலத்தில் மொத்தத்தையும் இழந்தார் அனில் அம்பானி.
கடனில் தவித்த தமிழ்நாட்டின் ஏர்செல் நிறுவனத்தை வாங்க முன்வந்த அனில் அம்பானி சில மாதங்களில் பின்வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனில் அம்பானியின் ADAG குழுமத்தின் மொத்த கடன் மதிப்பு மட்டும் 1.72 லட்சம் கோடி ரூபாயாகும்.