இந்திய சந்தை மொத்தமாகக் கலங்கடித்துள்ள அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் ரிசர்ச் விவகாரம் குறித்து உலகளவில் கிரெடிட் சூசி, சிட்டி குரூப், S&P டாவ் ஜோன்ஸ் அமைப்புகள் எடுத்துள்ள வேளையில் இந்தியாவில் செபி மற்றும் ரிசர்வ் வங்கி அதானி குழும தரவுகளை ஆய்வு செய்யத் துவங்கியுள்ளது.
இதன் எதிரொலியாக அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் இன்று 30 சதவீதம் வரையில் சரிந்து புதிய 52 வார சரிவை பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் ரிசர்ச் விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சர் பேசியுள்ளார்.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இந்திய சந்தைகள் சிறப்பான முறையில் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கெளதம் அதானியின் அதானி சாம்ராஜ்யத்தைப் பற்றிய சர்ச்சை முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்காது எனத் தான் நம்புவதாக எனத் தெரிவித்துள்ளார்.
10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
ஹிண்டர்பர்க் அமைப்பு அறிக்கை வெளியிட்டு இன்று வரையில் மொத்தம் 7 வர்த்தக நாளில் மட்டும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள 10 அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதோடு அதானி குரூப் பங்குகளின் சந்தை மதிப்பு 51 சதவீதம் சரிந்தது.
நிதிச் சந்தை
இந்தியா முற்றிலும் நன்கு நிர்வகிக்கப்பட்ட நாடாகவும், சிறப்பான ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சந்தையாகவும் இருக்கிறது. ஒரு நிகழ்வை உலகளவில் எந்த அளவுக்கு அதிகம் பேசப்பட்டாலும், இந்திய நிதிச் சந்தைகள் எவ்வளவு சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றது என்பது குறையப் போவதில்லை என்று நான் நினைக்கிறேன் என நிர்மலா சீதாராமன் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அபாயங்கள்
ஹிண்டன்பர்க் மற்றும் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்திற்கு இடையே நடந்து வரும் மோதலால் இந்திய வங்கி அமைப்பு மற்றும் கடன் வழங்குபவர்களுக்கு ஏற்படும் அபாயங்கள் குறித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய நிதி அமைப்பு நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
எஸ்பிஐ மற்றும் எல்ஐசி
இதேபோல் எஸ்பிஐ மற்றும் எல்ஐசி ஆகியவை அதானி குழுமத்திற்கு அதிகக் கடன் வெளிப்பாடு இல்லை என்று விளக்கம் அளித்துள்ளன. அதானி குழுமத்தின் பங்குகள் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் இருப்பதாகவும், அதன் பங்கு மதிப்புக் குறைந்தாலும் லாபம் அதிகமாக இருப்பதாகவும் எஸ்பிஐ மற்றும் எல்ஐசி தெளிவாகக் கூறியுள்ளது என நிதிமையச்சர் தெரிவித்துள்ளார்.
எல்ஐசி கடன்
அதானி குழுமத்தின் கடன் மற்றும் ஈக்விட்டிக்கு சுமார் 36,474.78 கோடி ரூபாய் அளிக்கப்பட்டு இருப்பதை மத்திய அரசுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) தெரிவித்துள்ளது. மேலும் இந்த 36,474.78 கோடி ரூபாய் தொகை எல்ஐசி-யின் மொத்த முதலீட்டில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என எல்ஐசி தரப்பில் தெரிவித்துள்ளது.
எங்கு ஆரம்பம்
ஜனவரி 24 ஆம் தேதி ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு அதானி குழுமம் குறித்து வெளியிட்ட கணக்கியல் முறைகேடுகள், நிதி பரிமாற்றத்தில் இருக்கும் சந்தேகம், செயற்கையாக அதானி குழும பங்குகளின் விலை உயர்வு, கௌதம் அதானி சகோதரர் வினோத் அதானிக்கு 38க்கும் அதிகமான வெளிநாட்டு நிறுவனங்கள் உடனான தொடர்பு, அதானி குழுமம் - வினோத் அதானி - சீன நாட்டவர் Chang Chung Ling உடன் தொடர்பு குறித்துக் கேள்வி எழுப்பியதில் இருந்து அதானி குழுமத்தின் வீழ்ச்சி ஆரம்பமானது.