கொரோனாவுக்கு பிறகு ஐடி துறையின் தேவையானது கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஐடி நிறுவனங்களுக்கு பல புதிய ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன.
இதன் காரணமாக ஐடி துறையில் பணியமர்த்தல் மற்றும் சம்பள உயர்வு அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவின் காரணமாக ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இதனால் ஐடி துறையில் தற்போது துணை ஒப்பந்ததாரர்களை சார்ந்திருப்பது குறைந்துள்ளது. இது பணியமர்த்தலை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
பணியமர்த்தல் அதிகரிக்கும்
குறிப்பாக கடந்த சில காலாண்டுகளாகவே ஐடி துறையில் வருவாயும் அதிகரித்து வருகிறது. இது கிட்டதட்ட 500 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதனால் 2022 - 23ம் நிதியாண்டில் முதல் ஐந்து ஐடி நிறுவனங்களின் நிகர ஊழியர்களின் பணியமர்த்தல் எண்ணிக்கையானது 1,50,000-க்கும் அதிகமாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது தற்போது 60,000 என்ற லெவலில் உள்ளது.
பணியமர்த்தல் சரிவு
கடந்த கால வரலாற்று போக்குடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, பணியமர்த்தலில், நடப்பு ஆண்டில் ஒரு சிறப்பான வளர்ச்சியினை கண்டுள்ளது என ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் 2012ல் அதிகளவு பணியமர்த்தலை செய்துள்ளன. ஆனால் அதன் பிறகு சராசரி பணியமர்த்தல் என்பது மிக குறைந்தது.
டாப் 5 ஐடி நிறுவனங்கள்
மொத்த அடிப்படையில் 2012ம் நிதியாண்டில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், காக்ணிசன்ட் டெக்னாலஜி சொல்யூசன்ஸ், விப்ரோ லிமிடெட், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகியவை நிகர பணியமர்த்தலாக 1,10,000 ஊழியர்கள் அறிவித்துள்ளன. ஆனால் அதன்பிறகு அந்த விகிதத்தினை எட்டவில்லை என்பதே உண்மை. ஆனால் கொரோனாவுக்கு பிறகு இந்த விகிதமாக கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
ஊதிய உயர்வு+ போனஸ்
குறிப்பாக கொரோவுக்கு பிறகு பணியமர்த்தலும் அதிகரித்துள்ளது. சம்பள விகிதம், போனஸ் உள்ளிட்ட பலவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சமீபத்தில் டிசிஎஸ் ஒன் டைம் போனஸினை அறிவித்தது. ஹெச்சிஎல்-லும் குறைந்தது ஒரு வருடம் பணியாற்றிய ஊழியர்களுக்கு 10 நாட்களுக்கு சமமான ஊதியத்தினை போனஸ் ஆக வழங்கியது. அது மட்டும் அல்ல, 2021ம் நிதியாண்டில் தள்ளிவைக்கப்பட்ட சம்பள உயர்வினை மற்ற ஐடி நிறுவனங்களும், இந்த ஆண்டில் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த நிதியாண்டில் இன்னும் அதிகரிக்கும்
அக்சென்ச்சர் நிறுவனமும் அதன் ஊழியர்களுக்கு ஒரு முறை போனஸை அறிவித்துள்ளது. கொரோனாவின் காரணமாக உலகளாவிய அளவில் டிஜிட்டல் தேவை அதிகரித்துள்ள நிலையில், இந்திய ஐடி நிறுவனங்களுக்கு தேவை அதிகரித்து வருகின்றது. இதே மேம்பட்ட வருவாய் வளர்ச்சிப் பாதையுடன் தொடர்ந்தால், 2012ல் பணியமர்த்தப்பட்ட நிலையை விட, இந்த 2022ம் ஆண்டில் அதிகரிக்கும். அதோடு இத்துறையில் சம்பள உயர்வு இருக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என ஜேஎம் பைனான்ஷியல் கூறியுள்ளது.