கொரோனா பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வந்து வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தையை முழுமையாகத் திறந்த சில நாடுகளில் முதன்மையானது சீனா தான். வேகமான பொருளாதார வளர்ச்சி பாதையில் இருக்கும் சீன சந்தையின் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.
சீனாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனத்தை உருவாக்கிய ஜாக் மா-வின் அலிபாபா குழுமத்தின் நிதி சேவை பிரிவான அன்ட் குரூப் இந்நாட்டின் டிஜிட்டல் பேமெண்ட் சேவையின் ராஜா. இந்த நிறுவனம் பல ஆண்டுகள் தொடர் வர்த்தக வெற்றிக்குப் பின் சீனா மற்றும் ஹாங்காங் ஆகிய இரு நாட்டுப் பங்குச்சந்தையிலும் ஓரே நேரத்தில் ஐபிஓ வெளியிட உள்ளது.
இதனால் சீனா முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் உலகில் பல முன்னணி முதலீட்டு நிறுவனங்களும் முதலீடு செய்ய ஆர்வமாகக் காத்துக்கொண்டு இருக்கிறது.
ஆன்ட் குரூப்
அலிபாபா குழுமத்தின் ஆன்ட் குரூப் சீனாவில் டிஜிட்டல் பேமெண்ட், ஆன்லைன் நிதியியல் சேவை எனப் பல்வேறு வங்கியியல் சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் கீழ் தான் சீனாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மேமெண்ட் தளமான அலிபே உள்ளது. சீனா முழுவதிலும் சுமார் 1 பில்லியன் வாடிக்கையாளர்களும், 80 மில்லியன் விற்பனையாளர்களைக் கொண்டு வருடம் 118 டிரில்லியன் யுவான் மதிப்பிலான வர்த்தகத்தைச் செய்கிறது.
மதிப்பீடு
இன்றைய நிலையில் ஆன்ட் குரூப் சுமார் 313 பில்லியன் டாலர் அளவிலான மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்த மதிப்பீட்டின் மூலம் சீனாவின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ICBC (Industrial and Commercial Bank of China) வங்கியை விடவும் பெரிய நிதியியல் நிறுவனமாகத் தற்போது ஆன்ட் குரூப் விளங்குகிறது.
இதனால் இந்நிறுவன ஐபிஓ-விற்குச் சீன ரீடைல் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
தடை
ஆனால் இதே ஆன்ட் குரூப் நிறுவனத்தின் நுகர்வோர் கடன் வர்த்தகத்தில் பல்வேறு முறைகேடு உள்ளதாகச் சீன கட்டுப்பாட்டு அமைப்பு இந்நிறுவனத்தைக் கவனித்து வருகிறது. இதோடு சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா வித்துள்ள வர்த்தகத் தடை உத்தரவுகளில் அலிபாபாவின் ஆன்ட் குரூப் நிறுவனமும் ஒன்று என்பது கவனிக்க வேண்டியது.
சர்வதேச முதலீட்டாளர்கள்
இந்தப் பிரச்சனைகள் எதையும் பொருட்படுத்தாமல் ஆன்ட் குரூப்-ன் ஐபிஓ-வில் சிங்கப்பூர் அரசு முதலீட்டு அமைப்பான Temasek Holding, அபுதாபி முதலீட்டு அமைப்புகளான GIC மற்றும் ADIA ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளது.
இந்த அறிவிப்பால் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் போட்டிப்போடு முதலீடு செய்யத் தயாராகி வருகின்றனர்.
34.4 பில்லியன் டாலர்
இந்நிலையில் ஆன்ட் குரூப் சீனா மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தையில் தலா 1.67 பில்லியன் பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. சீனாவில் ஒரு பங்கு விலை 68.8 யுவான் ($10.27), ஹாங்காங் சந்தை ஒரு பங்கு 80 ஹாங்காங் டாலர் ($10.32) மதிப்பீட்டில் பட்டியலிட உள்ளது.
17.24 பில்லியன் டாலர்
இதன் மூலம் சீனா மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தையில் தலா 17.24 பில்லியன் டாலர் முதலீட்டை ஆன்ட் குரூப் ஈர்க்க உள்ளது. மேலும் இரு நாட்டு சந்தையிலும் ஆன்ட் குரூப்-ன் ஐபிஓ தான் அதிக மதிப்புடையது என்பது கூடுதல் தகவல்.
நவம்பர் 5ஆம் தேதி ஆன்ட் குரூப்-ன் ஐபிஓ முதலீட்டுக்காகத் திறக்கப்படுகிறது. அமெரிக்கத் தேர்தல் முடிந்து 2 நாட்களுக்குப் பின் ஐபிஓ வருவதால் அமெரிக்கத் தனியார் முதலீட்டு நிறுவனங்களின் முதலீடும் வர அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.