2022-23ஆம் நிதியாண்டு துவங்கிவிட்ட நிலையில் பல வரி மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது, இதனால் மக்கள் அனைவரும் எந்த விதத்தில் அதிகப் பாதிப்பையும், எந்த இடத்தில் கூடுதல் லாபம் கிடைக்கப்போகும் என்பதையும் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய வீட்டை வங்கி கடன் மூலம் வாங்கத் திட்டமிடுவோருக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி காத்திருக்கிறது.
மத்திய அரசு
மத்திய அரசு நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு பெற வேண்டும் என்பதற்காகவும், இதேவேளையில் ரியல் எஸ்டேட் மற்றும் வேலைவாய்ப்பு சந்தையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மலிவு விலை வீடுகளின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் 2019 பட்ஜெட் அறிக்கையில் முக்கியமான அறிவிப்பு வெளியானது.
80EEA பிரிவு
இந்த அறிவிப்பில் முதல் முறையாக வீடு வாங்குவோருக்குக் கூடுதல் சலுகை அளிக்கும் வகையில் வங்கி கடனுக்குச் செலுத்தப்படும் தொகையில் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான பணத்திற்கு வருமான வரி சலுகையை 80EEA பிரிவில் கீழ் அளிக்கப்படும் என 2019 பட்ஜெட் அறிவிப்பில் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
1.5 லட்சம் ரூபாய் வரிச் சலுகை
இந்த 1.5 லட்சம் ரூபாய் வரையிலான சலுகை ஏப்ரல் 1, 2019 முதல் மார்ச் 31, 2020 வரையிலான காலகட்டத்தில் வாங்கும் வீட்டுக் கடனுக்கு மட்டும் தான் அறிவிக்கப்பட்டது. இதன் பின்பு மார்ச் 31, 2021க்கும், அதைத் தொடர்ந்து மார்ச் 31, 2022க்கு பின்பும் நீட்டிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தச் சலுகை திட்டத்திற்கு எவ்விதமான நீட்டிப்பும் அறிவிக்கப்படவில்லை.
வீட்டுக் கடன்
இது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 24பி பிரிவின் கீழ் அளிக்கப்படும் 2 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டி செலுத்துவதில் கிடைக்கும் சலுகையைத் தாண்டி இந்த 80EEA பிரிவில் 1.5 லட்சம் ரூபாய்க்குச் சலுகை அளிக்கப்பட்டதால் மக்கள் ஆர்வத்துடன் சொந்த வீட்டை வாங்கினர்.
45 லட்சம் ரூபாய்
மேலும் இந்தச் சலுகையைப் பெற்ற வீட்டின் மதிப்பு 45 லட்சத்திற்கும் குறைவாக இருந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்த காரணத்தால் நடுத்தர மக்கள் ஆர்வத்துடன் இந்த 80EEA சலுகையைப் பெற சொந்த வீட்டை வாங்கினர். ஆனால் ஏப்ரல் 1 முதல் இது கிடையாது, அதாவது மார்ச் 31, 2022க்குள் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும்.