இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருக்கும் அதிகளவிலான போட்டி மற்றும் கடுமையான வர்த்தகச் சூழ்நிலையின் வாயிலான இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் ஜப்பான் நாட்டின் ஹோண்டா நிறுவனம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நொய்டா பகுதியில் இருக்கும் தொழிற்சாலையை மூட முடிவு செய்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் இருக்கும் ஹார்லி டேவிட்சன் தொழிற்சாலை மூட அறிவிப்பு வெளியான அடுத்த சில வாரத்தில் ஹோண்டா தனது தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹோண்டா நிறுவனம்
ஹோண்டாவின் இந்த நொய்டா தொழிற்சாலை 1997 முதல் இயங்கி வருகிறது, இது நாட்டின் பழமையான கார் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இந்தத் தொழிற்சாலையில் ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் கார்களைத் தயாரிக்கும் அளவிற்குத் திறன் கொண்டுள்ளது.
23 வருட பழமையான தொழிற்சாலை
கடுமையான வர்த்தகப் பாதிப்பு மற்றும் நிதி நெருக்கடி மூலம் தவித்து வரும் ஹோண்டா நிறுவனம் செலவுகளைக் குறைக்கவும், தேவையற்ற இடத்தில் பணத்தை விரயம் செய்வதைக் குறைக்கும் விதமாக இந்த 23 வருடப் பழமையான தொழிற்சாலையை மூட முடிவு செய்துள்ளது.
ஹோண்டாவின் முக்கியக் கார்கள்
ஹோண்டா நிறுவனத்தின் முக்கியக் கார்களான சிட்டி, அமேஸ், WRV மற்றும் ஜாஸ் ஆகிய கார்களை வருடம் 1.8 லட்சம் கார்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட ஆல்வார் பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் காரணத்தால், நொய்டாவில் இருக்கும் தொழிற்சாலையை மூட முடிவு செய்துள்ளது.
1 லட்ச கார்கள் மட்டுமே விற்பனை
2019-20ஆம் ஆண்டு ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் 1 லட்சத்திற்கும் குறைவான கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ள நிலையில், ஆல்வார் தொழிற்சாலை எதிர்காலத் தேவையையும் பூர்த்தி செய்யும் அளவில் இருக்கும் காரணத்தால் இந்த முடிவை ஹோண்டா எடுத்துள்ளது.
150 ஏக்கர் தொழிற்சாலை
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்தத் தொழிற்சாலையில் ஏற்கனவே ஊழியர்களுக்கு வீஆர்எஸ் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது தொழிற்சாலையை முழுமையாக முடக்க முடிவு செய்துள்ளது. ஆனால் நொய்டாவில் R&D செட்அப், கார்பரேட் அலுவலகம், உதிரி பாகங்கள் வர்த்தகம், நிர்வாகப் பணிகள் அனைத்தும் தொடரும் எனவும் ஹோண்டா தெரிவித்துள்ளது.
85 சதவீத ஆட்டோமொபைல் வர்த்தகச் சந்தை
இந்தியாவில் பயணிகள் வாகன பிரிவில் மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், கியா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய 5 நிறுவனங்கள் மட்டுமே சுமார் 85 சதவீத ஆட்டோமொபைல் வர்த்தகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த டாப் 5 பட்டியலில் புதிதாக இந்தியாவில் அறிமுகமான கியா மோட்டார்ஸ் இடம்பெற்றுள்ளதே சக போட்டி நிறுவனங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
22 நிறுவனங்கள் போட்டி
டாப் 5 நிறுவனங்கள் மட்டுமே 85 சதவீத சந்தையைக் கைப்பற்றியுள்ள நிலையில் மீதமுள்ள 15 சதவீத சந்தைக்கு ரெனால்ட், போர்டு, ஹோண்டா, டோயோட்டா, வோக்ஸ் வேகன் உட்பட 22 நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகிறது.
டாப் 5 நிறுவனங்கள் ஆதிக்கம்
ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் படி கடந்த வருடம் நவம்பர் மாத தரவுகள் படி டாப் 5 நிறுவனங்கள் இந்தியப் பயணிகள் வாகன பிரிவில் 81.56 சதவீத சந்தையைக் கைப்பற்றியிருந்த நிலையில், இந்த வருடத்தின் நவம்பர் மாதத்தில் இதன் அளவு 4.5 சதவீதம் அதிகரித்து டாப் 5 நிறுவனங்கள் மட்டும் சுமார் 85 சதவீதத்தைத் தாண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
சீனா, அமெரிக்கா, ஜெர்மனி
உலகிலேயே மிகப்பெரிய ஆட்டோமொபல் வர்த்தகம் கொண்ட சீனாவில் டாப் 5 நிறுவனங்கள் வெறும் 40 சதவீத சந்தையை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இதேபோல் அமெரிக்காவில் 68 சதவீதம், ஜெர்மனியில் 50 சதவீதம் சந்தைகளை மட்டுமே டாப் 5 நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது. ஆனால் இந்தியாவில் டாப் 5 நிறுவனங்கள் சுமார் 85 சதவீத வர்த்தகத்தை ஆட்சி செய்கிறது.


Click it and Unblock the Notifications