கொரோனா போரில், தன் மக்களைக் காப்பாற்ற ஹாங்காங் நாடும், தன் கஜானாவில் இருந்து சுமார் 137.5 பில்லியன் ஹாங்காங் டாலரை இன்று அறிவித்து இருக்கிறது.
இது இந்திய மதிப்பில் சுமாராக 1.20 லட்சம் கோடி ரூபாய் வருகிறது.
இந்த பணத்தைக் கொண்டு தங்களால் முடிந்த வரை கொரோனாவின் தாக்கத்தைக் குறைக்க களம் இறங்கி இருக்கிறது ஹாங்காங்.
சம்பளம் கட்
ஹாங்காங் நாட்டின் தலைவர் கேரி லாம் (Carrie Lam) ஒரு ஆண்டு காலத்துக்கு, தன் சம்பளத்தில் 10 சதவிகிதத்தைக் குறைத்துக் கொள்ள இருக்கிறாராம். அதோடு ஹாங்காங் தலைவர் அறிவித்து இருக்கும் 137.5 பில்லியன் ஹாங்காங் டாலர் திட்டத்தில் சுமாராக 80 பில்லியன் ஹாங்காங் டாலர், சம்பள திட்டத்துக்குத் தான் போகப் போகிறதாம்.
சம்பளம்
இந்த கொரோனா பாதிப்பினால் வழக்கம் போல, மக்களால் வேலைக்கு போய் சம்பாதிக்க முடியவில்லை. எனவே, அரசு, தொழிலாளர்களுக்கு 6 மாதங்களுக்கு 50 % சம்பளத்தை மானியாக கொடுக்க இருக்கிறார்களாம். அதிகபட்சமாக மாதத்துக்கு 9,000 ஹாங்காங் டாலரை (சுமார் 81,000 இந்திய ரூபாய்) இந்த சம்பள மானியமாக கொடுக்க இருக்கிறார்களாம்.
வேண்டு கோள்
ஒரு பகுதி சம்பளத்தை அரசு கொடுக்க இருப்பதாக அறிவித்த பின்னர், கம்பெனிகள் மற்றும் முதலாளிகளிடம், தங்கள் ஊழியர்களை வேலையை விட்டு நீக்க வேண்டாம் எனவும் அரசு வலியுறுத்தி இருக்கிறார்களாம். ஏற்கனவே அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஹாங்காங் தகித்துக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் பற்றாக்குறை
இப்படி ஹாங்காங் மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க, பணத்தை அள்ளி இரைப்பதால், ஹாங்காங் நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறை சுமாராக 139.1 பில்லியன் ஹாங்காங் டாலரில் இருந்து 276.6 பில்லியன் ஹாங்காங் டாலராக அதிகரிக்குமாம். இது ஹாங்காங் நாட்டின் மொத்த ஜிடிபியில் 9.5 சதவிகிதமாம்.
ஹாங்காங்கில் கொரோனா
சமீபத்தைய கணக்குப் படி ஹாங்காங்கில் சுமார் 960 பேருக்கு கொரோனா பரவி இருக்கிறது, 4 பேர் மரணித்து இருக்கிறார்கள். எனவே வரும் ஏப்ரல் 24 வரை சமூக விலகலை அழுத்தமாக வலியுறுத்தும் விதத்தில்... பார்கள், பப்கள் மற்றும் பொது மக்கள் கூடுவதற்கு தடை விதித்து இருக்கிறது ஹாங்காங் அரசு.