ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்களை விளம்பரம் செய்வதற்கு பல்வேறு சலுகைகளை அறிவிப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கும் ஹோட்டல் நிறுவனம் குறித்த ஆச்சரியமான தகவல் வெளியாகி உள்ளது.
வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ள ஹோட்டல் நிறுவனம், அந்நிறுவனம் அறிவித்துள்ள சலுகைகள் குறித்து தற்போது பார்ப்போம்.
ஜெர்மனி ரூபி ஹோட்டல்
ஜெர்மனியில் உள்ள ரூபி ஹோட்டல் நிறுவனத்தில் பணிபுரிய வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு முடிவெட்டுதல், டாட்டூ குத்துதல் ஆகிய செலவுகளுக்காக இந்திய மதிப்பில் ரூ.40,000 தரும் சலுகையை அறிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கவர்ச்சிகரமான சலுகைகள்
கவர்ச்சிகரமான சலுகைகள் என்பது தற்போது அனைத்திற்குமே தேவையான ஒன்றாக மாறிவிட்ட நிலையில் ஒரு வணிக நிறுவனத்திற்கு புதிய பணியாளர்களை சேர்ப்பதற்கும் கவர்ச்சிகரமான சலுகை தேவை என்பது தற்போது டிரெண்ட் ஆகியுள்ளது. இந்த கவர்ச்சிகரமான சலுகையை பார்த்து ஊழியர்கள் அதிகளவு வேலைக்கு சேர்வது மட்டுமின்றி அந்த நிறுவனத்திற்கு மக்கள் மத்தியிலும் நல்ல பெயர் கிடைக்கின்றது.
500 யூரோ சலுகை
ஜெர்மன் நாட்டில் உள்ள ரூபி ஹோட்டல் குழுமம் தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேரும் விண்ணப்பதாரர்களை ஈர்க்கக்கூடிய வகையில் பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பணியில் சேர்பவர்களுக்கு புதிதாக டாட்டூ குத்திக்கொள்வது, முடிவெட்டுவது உள்பட பல்வேறு செலவுகளுக்கு 500 யூரோ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 500 யூரோ என்பது இந்திய ரூபாயின் மதிப்பில் 40,000க்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிபந்தனை
ஆனால் அதே நேரத்தில் இந்த சலுகைகளை பெறுவதற்கு ஊழியர்களுக்கு சில நிபந்தனைகளையும் ரூபி ஓட்டல் குழு வெளியிட்டுள்ளது. அதாவது ரூபி குழுவில் புதிதாக பணிக்குச் சேர்ந்து ஆறு மாதங்கள் முடிந்த பின்னர்தான் இந்த சலுகை பலனை அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செலவுகள்
இதுகுறித்து ரூபி குழுவின் மனித வளங்களின் துணை தலைவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'பச்சை குத்திக்கொள்வது, சிகை அலங்காரம் செய்வது என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பமாகும். ஒவ்வொரு பணியாளரும் அவர்கள் விருப்பப்படியே இருக்க வேண்டும் என்று ரூபி நிறுவனம் விரும்புகிறது. எனவே அதற்குரிய செலவுகளையும் நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது. இதன் மூலம் எங்கள் நிறுவனத்தில் பணியில் சேர இளைஞர்கள் அதிக அளவில் முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ஆளுமை உடையவர்கள்
மேலும் நாங்கள் நல்ல ஆளுமை உடையவர்களை நேசிக்கிறோம், அவர்கள் தான் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என விரும்புகிறோம் என்றும் தனிப்பட்ட முறையில் தங்களுடைய விருப்பு வெறுப்புகளை உடைய மனநிலை உள்ளவர்கள் வெற்றியையும் பெறுவார்கள் என்றும் மேலும் கூறினார்.
மக்கள் கண்ணோட்டம்
ரூபியின் இந்த விளம்பரம் அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேரும் ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் கவர்ந்துள்ளது. ஊழியர்களுக்கு சலுகைகள் அறிவித்து மரியாதையுடன் நடத்தும் இந்த நிறுவனத்தின் மீது மக்களின் கண்ணோட்டமும் அதிகரித்து உள்ளது என்பதும் அதனால் இந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.