பெங்களூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டு வாடகை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் வீட்டு வாடகை உச்சத்திற்கு சென்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்யும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறை அமலுக்கு வந்தது. இதன் காரணமாக பெங்களூரில் உள்ள பெரும்பாலான வீடுகள் காலியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது வொர்க் ஃப்ரம் ஹோம் முறை முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து மீண்டும் பெங்களூரில் வீடுகளுக்கு டிமாண்ட் உள்ளது என்றும் அதனால் வீட்டு வாடகை உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வாடகை உயர்வு
பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அதிக தேவை இருப்பதால் வீட்டு வாடகை 40% வரை உயர்ந்திருப்பதாக ரியல் எஸ்டேட் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின் பின்னர் தற்போது பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதன் காரணமாக ஊழியர்கள் மீண்டும் பெங்களூருக்கு திரும்பியுள்ளதால் வீடுகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
தேவை அதிகரிப்பு
வீடுகளின் தேவை அதிகரித்துள்ளதால் வீட்டு வாடகையும் உயர்த்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக கட்டுமான பணிகள் முடங்கிய நிலையில் தற்போது மீண்டும் மக்கள் நகரத்திற்கு மக்கள் குடியேற தொடங்கி உள்ளதால் கட்டுமான பணிகளும் முடுக்கி விடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூரில் வாடகை வீடு தேவை அதிகரித்துள்ளதை அடுத்து ரியல் எஸ்டேட் துறையும் தற்போது சுறுசுறுப்பாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுக்குமாடி குடியிருப்பு
பெங்களூரில் உள்ள பொதுமக்கள் பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்பை தான் விரும்புகின்றனர் என்றும் அதன் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை வாடகை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்னும் அதிகரிக்குமா?
பிற நகரங்களில் இருந்து பெங்களூருக்கு இடம்பெயரும் சாதாரண பொதுமக்கள் முதல் தொழில் வல்லுனர்கள் வரை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் வீடுகளின் தேவையும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால் பெங்களூரில் இன்னும் வீட்டின் தேவை அதிகரிக்கும் என்றும் அதனால் ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 8 சதவீதம் வீட்டின் வாடகை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏற்கனவே குடியிருந்தவர்களுக்கு 15 முதல் 25 சதவீதம் வரை வாடகை அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.
மற்ற நகரங்கள்
பெங்களூர் மட்டுமின்றி சென்னை உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் தற்போது வீடுகளுக்கு தேவை அதிகரித்துள்ளதாகவும் அதன் காரணமாக வீட்டின் வாடகை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.