மும்பை: டிசம்பர் 1ம் தேதி முதல், டோல்கேட்களில் FASTag கட்டாயம் என்று, மத்திய, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், அறிவித்துள்ளது.
ஒருவேளை அப்படி செய்யாவிட்டால், இரட்டிப்பு தொகை வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே வாகன உரிமையாளர்கள், FASTag வாங்குவதிலும், ரீசார்ஜ் செய்வதிலும் பிஸியாகிவிட்டனர். வாகனங்களின் சீரான இயக்கத்தை உறுதிசெய்வதும், பணமில்லா பேமென்ட்டை ஊக்குவிப்பதும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதும் இதன் நோக்கம்.
டோல் பிளாசாக்களில் உள்ள அனைத்து பாதைகளிலும், பாஸ்டேக் வசதி கொண்டுவரப்படும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இரட்டிப்பு கட்டணம்
அதேநேரம், ஒரு பாதை மட்டும், ஹைப்ரிட் பாதையாகவே தொடரும். அதாவது, ஃபாஸ்ட்டேக்குடன், பிற வகையில் கட்டணம் செலுத்துவோரும் இந்த வழியில் போகமுடியும். ஆனால், பிற வகையில் பணம் செலுத்தினால், இரட்டிப்பாக வசூலிக்கப்படும். இப்போது, வாகன ஓட்டிகளுக்கும், வாகன உரிமையாளர்களுக்கும், இருக்க கூடிய பல சந்தேகங்களில் முக்கியமான ஒரு சந்தேகம் என்ன தெரியுமா?
காலக்கெடு
சில டோல்கேட்களில் இரவு 12 மணிக்குள்ளாகவோ, பல டோல்கேட்களில், ஒரு முறை பயணித்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே, மீண்டும் அதே பாதையில் திரும்பி வந்தால், கட்டண சலுகை உண்டு. உதாரணத்திற்கு ஒருமுறை செல்ல என்று நாம் டிக்கெட் வாங்கினால், 60 ரூபாய் என வைத்துக்கொள்வோம், மறுமுறை 24 மணி நேரத்திற்குள் அந்த டோல்கேட்டுக்கு திரும்பி வந்தால், 'டூவே ட்ரிப்' என கூறி, டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். அப்படி பெறும்போது 120 வசூலிக்கப்படாது. கட்டணத்தில் சலுகை தரப்படும். 100 ரூபாயோ, அல்லது 90 ரூபாயோதான் வசூலிக்கப்படும். இது டோல்கேட்டுகளை பொறுத்து மாறுபடும்.
எப்படி கழிக்கும்
நாமே நமது பயணத்திட்டத்தை கணித்து இவ்வாறு டோல்கேட்களில் கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்குவோம். ஆனால் FASTag பயன்படுத்தி டோல்கேட்டை கடந்தால், டூவே ட்ரிப்பாக இருந்தாலும், போகும்போதும் வரும்போதும் தலா ரூ.60 என்று, மொத்தம் 120 ரூபாய்தானே, தானியங்கியாக, கழித்துக்கொள்ளப்படும்.. நாம் 2 முறை பயணிக்கப்போவது எப்படி பாஸ்டேக்கிற்கு தெரியும் என்ற சந்தேகம்தான், கார் உரிமையாளர்களுக்கு இப்போது பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
குழப்பம் வேண்டாம்
இதுகுறித்து நெடுஞ்சாலை அமைச்சக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் கூறியது இதுதான்: நீங்கள் ஒரே டோல்கேட்டில் மறுபடியும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் திரும்பினால், 2வது முறை வரும்போது, அது சலுகை கட்டணத்தைதான் தானியங்கியாக பரிசீலிக்கும். உதாரணத்திற்கு, ஒன்வே ட்ரிப் என்றால் 60 ரூபாய், டூவே ட்ரிப் என்றால் 100 ரூபாய் என்று, சலுகை இருக்க கூடிய ஒரு டோல்கேட்டை எடுத்துக்கொள்வோம். முதலில் போகும்போது 60 ரூபாய் முழுமையாக கழிக்கப்படும். 2வதுமுறை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அதே டோல்கேட் வந்தால், உங்கள் FASTag கணக்கிலிருந்து ரூ.40 மட்டுமே கழிக்கப்படும். ஆக மொத்தம் டூவேட்ரிப்புக்கு 100 மட்டுமே. இது தானியங்கி முறையில் கணக்கிடப்பட்டு செயல்படும். ஒவ்வொரு டோல்கேட்டை கடந்ததுமே, FASTag கணக்குடன் இணைத்துள்ள செல்போன் எண்ணுக்கு, கட்டண விவரம் எஸ்எம்எஸ் மூலமாக வரும். எனவே உங்களுக்கு கட்டணம் குறித்து எளிமையாக புரியும். இவ்வாறு அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
எல்லாம் நல்லதுதான்
FASTag இப்படி தானியங்கி முறையில் டூவே ட்ரிப்பை கணக்கிடுவதில், ஒரு நன்மையும் இருக்கிறது. நாம் சில ஊர்களுக்கு செல்லும்போது, 24 மணி நேரத்திற்குள்ளாக மறுபடியும் அதே பாதையில் வருவோமா அல்லது தாமதமாக வருவோமா என்ற சந்தேகத்தோடு இருப்போம். எனவே ஒன்வே ட்ரிப் டிக்கெட் பெறுபவர்களே அதிகம். ஆனால் 24 மணி நேரத்திற்குள் நாம் திரும்பி அதே பாதையில் வரும் சூழ்நிலை வந்தால், திரும்பவும் ஒன்வே ட்ரிப் டிக்கெட் எடுக்க வேண்டி வரும். இதனால் நாம் கட்டண சலுகையை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால், என்னதான் குழப்பம் இருந்தாலும், FASTag இருந்தால் பிரச்சினை இல்லை. அதுவாகவே கணக்கிட்டு உரிய தொகையை மட்டுமே எடுக்கும் என்பதால், நமது பயண நேரத்தை பற்றி நாம் அதிகம் யோசிக்க தேவையில்லை.