இந்தியாவிலேயே மிகப்பெரிய எக்ஸ்சேஞ்ச் ஆக இருந்து வரும் என்எஸ்இ(NSE)யின் முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன், 20 ஆண்டுகளாக ஹிமாலயா சாமியார் ஒருவரின் வழிகாட்டலை கேட்ட பிறகே முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும், பல முக்கிய விவரங்களும் சாமியருடன் பகிரப்பட்டதாகவும் கூறப்படுவது, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பங்கு சந்தை அமைப்பாக இருந்து வரும் NSE-யில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பது, தற்போதும் கூட நம்ப முடியாத ஒரு விஷயமாக உள்ளது.
ஆனால் இவை அனைத்தும் உண்மையே. 20 வருடங்களாக சித்ரா ராமகிருஷ்ணன் ஹிமாலயா சாமியருடன், எந்த ஒரு முக்கிய விஷயமாக இருந்தாலும் கலந்தாலோசித்து முடிவெடுத்தும் வந்துள்ளார்.
சாமியாரின் கைப்பாவை
இது இந்திய முதலீட்டாளார்கள் மட்டும் அல்ல, இந்தியா பங்கு சந்தையில் முதலீடு செய்யும், சர்வதேச முதலீட்டாளர்களையும் இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இது குறித்த செபியின் ஆவணங்களின் படி கடந்த 2016ம் ஆண்டு சித்ரா என்.எஸ்.இ-யில் இருந்து விலகினார். ஆனால் தனது பதவிகாலம் முழுவதுமே சித்ரா சாமியாருக்கு ஒரு கைப்பாவையாகத் தான் இருந்தார் என செபி தரப்பு அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.
என்ன மெயில் ஐடி அது?
ஹிமாலயாவில் வசிக்கும் சாமியாரின் பேச்சை கேட்டே ஒவ்வொரு முக்கிய முடிவுகளையும் சித்ரா எடுத்துள்ளார். இதற்கு இந்த சாமியார் பயன்படுத்தியது மூன்று எழுத்து மந்திரங்களையே. அது rigyajursama@outlook.com என்ற ஐடி தான். இதில் கொடுமை என்னவெனில் இதுவரையில் சித்ரா அந்த ஹிமாலயா சாமியாரை பார்த்தது கிடையாதாம். மெயிலில் தான் பேசியுள்ளதாக அவரே விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆனந்த் சுப்ரமணியன் பணியமர்த்தல்
மேலும் NSE-யின் தலைமை மூலோபாய ஆலோசகர் என்ற முக்கிய பதவியினை ஆனந்த் சுப்ரமணியனுக்கு வழங்கியுள்ளது. இந்த பணியமர்த்தலில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இவருக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுவும் சாமியாரின் ஆலோசனை படி நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அனுபவம் இல்லாதவருக்கு உயர் பதவி
முன்னதாக வெறும் 15 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த, அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்ரமணியனை, 2013ம் ஆண்டில் 1.68 கோடி ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்தியுள்ளார் சித்ரா. எனினும் பணியமர்த்திய சிறிது காலத்திலேயே அவரின் சம்பளம் 4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது மற்ற ஊழியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
முதல் வகுப்பில் விமான பயணம்
அதுமட்டுமே அல்ல உலகின் எந்த நாட்டு விமானத்திலும் முதல் வகுப்பில் பயணம் செய்வதற்கான சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் எம்டிக்கு அடுத்த கேபின் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. மேலும் அலுவலகத்திலும் ஆனந்த் அவரது இஷ்டப்படி வந்து செல்லலாம் என்ற அளவுக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
சிரோன்மணி
என் எஸ் இ-யின் வணிக திட்டங்கள், நிர்வாக கூட்டத்தின் நிகழ்வுகள், பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் குறித்த முன் கூட்டிய கணிப்புகள் என பல முக்கிய அம்சங்களையும் சித்ரா, அந்த ஹிமாலய சாமியாரிடம் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த சாமியாரின் பெயர் சிரோன்மணி என்றும் தெரிவித்துள்ளார் சித்ரா.
ரிக் யாஜூர் சாமா
மொத்தத்தில் "ரிக் யாஜூர் சாமா" என்ற மூன்று எழுத்து மந்திரங்களை வைத்து சித்ராவினை ஆட்டி வைத்த, அந்த ஆசாமி யார்? உண்மையில் அவர் சாமியாரா? அல்லது சித்ராவின் ஆன்மீக பக்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆசாமிகளா? செபியின் முழு விசாரணை முடிந்த பிறகே முழு விவரங்கள் என்ன? என்பது தெரிய வரும்.