இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்து உருவாக்கிய டெலிகாம் நிறுவனமான ஜியோ மக்களின் சேவைக்கு வந்து கிட்டத்தட்ட 3 வருடங்கள் முழுமையாக முடிந்துள்ளது.
ஜியோவின் அறிமுகத்திற்குப் பின் இந்திய டெலிகாம் சந்தையே மொத்தமாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை, இதை ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் பணக்காரர்கள் மட்டுமே மொபைல் இண்டர்நெட்-ஐ பயன்படுத்தும் நிலை மாறி தற்போது சமானிய மக்கள் முதல் தினசரி கூலி வேலைக்கும் செல்லும் மக்கள் வரையில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இதற்குக் காரணம் ஜியோ என்றால் மிகையில்லை.
இண்டநெட் டேட்டா
ஜியோ அறிமுகம் ஆன பின்பு மக்களின் இண்டர்நெட் டேட்டா பயன்பாட்டு அளவு 500எம்பி-யில் இருந்து 10.6 ஜிபியாக உயர்ந்துள்ளது. கோட்டாக் இன்ஸ்டியூஷனல் ஈக்விட்டீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியர்கள் சுமார் 20.3 பில்லியன் ஜிபி இண்டர்நெட் டேட்டா பயன்படுத்தியுள்ளனர், இதுவே ஏப்ரல்-ஜூன் 2016 காலாண்டில் அதாவது ஜியோ அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு வெறும் 0.49 பில்லியன் ஜிபி டேட்டாவாக மட்டுமே இருந்துள்ளது.
இது கிட்டதட்ட 4160 சதவீத வளர்ச்சி இது வெறும் 3 வருடத்தில் நடந்துள்ளது தான் அதிசயம், அற்புதம்.
வாடிக்கையாளர்கள்
ஜியோ அறிமுகத்திற்கு முன்பு 2ஜி டேட்டா பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 182 மில்லியனாக இருந்த நிலையில் ஜியோ அறிமுகத்திற்குப் பின் தற்போது 58 மில்லியனாகக் குறைந்துள்ளது.
அதேபோல் அதிவேக இண்டர்நெட் சேவையான 3ஜி மற்றும் 4ஜி டேட்டா பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 132 மில்லியன் வாடிக்கையாளர்களில் இருந்து 607 மில்லியனாக உயர்ந்துள்ளது.
வாய்ஸ் கால் வாடிக்கையாளர்கள்
இதேபோல் வாய்ஸ் கால் மட்டும் பயன்படுத்தும் டெலிகாம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஜியோ அறிமுகத்திற்குப் பின் பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்த 3 வருட இடைப்பட்ட காலத்தில் 721 மில்லியனாக இருந்த வாய்ஸ் கால் வாடிக்கையாளர்கள் 509 மில்லியனாகக் குறைந்துள்ளது.
வாய்ஸ் கால் நேரம்
ஜியோ அறிமுகத்திற்கு முன் ஒரு காலாண்டில் ஒரு வாடிக்கையாளர் சராசரியாக 1113 நிமிடங்கள் வாய்ஸ் கால் பேசிய நிலையில், ஜியோவின் இலவச வாய்ஸ் கால் சேவை மூலம் இதன் அளவு மளமளவென உயர்ந்து தற்போது ஒரு வாடிக்கையாளர் ஒரு காலாண்டிற்கு 2073 நிமிடங்களாக உயர்ந்துள்ளது.
கட்டணம்
இவை அனைத்தையும் தாண்டி ஜியோ அறிமுகத்திற்கு முன் ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதத்திற்கு 125 ரூபாய் செலவு செய்த நிலையில் ஜியோ அறிமுகத்திற்குப் பின் இது வெறும் 74 ரூபாயாகக் குறைந்துள்ளது.
இது மக்களுக்குப் பெரிய அளவிலான நன்மையை அளித்தாலும், டெலிகாம் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வருவாய் சுமையைக் கொடுத்துள்ளது.