திங்கட்கிழமை இந்தியாவில் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.05 ரூபாயிலிருந்து 77 ரூபாய் 42 காசுகளாகச் சரிந்துள்ளது.
ரூபாய் மதிப்பு குறையும் போது என்.ஆர்.ஐ, ஏற்றுமதியாளர்கள் இதனால் அதிக பயன்பெறுவார்கள். மேலும் பங்குச்சந்தையில் எந்த துறை சார்ந்த பங்குகளில் எல்லாம் கவனம் செலுத்தினால் கூடுதல் லாபம் கிடைக்கும் என இங்குப் பார்க்கலாம்.
என்.ஆர்.ஐ
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரியும் போது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் (என்.ஆர்.ஐ-கள்), இந்தியாவில் உள்ள தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்குப் பணம் அனுப்பும் போது கூடுதலாகத் தொகை அவர்களுக்குக் கிடைக்கும்.
பயன் அடையும் ஏற்றுமதி நிறுவனங்கள்
ரூபாய் மதிப்பு சரியும் நேரங்களில் இந்தியப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் போது குறைந்து விலைக்குச் சர்வதேசச் சந்தைக்குச் செல்லும். அதன் மூலம் இந்தியப் பொருட்கள் சர்வதேசச் சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்படுவது மட்டும் இல்லாமல் பெரிய அளவிலான சந்தையினையும் பெறும்.
அன்னிய செலாவணி
இந்தியாவிற்கு அதிகளவிலான அன்னிய செலாவணி வரவும் வாய்ப்புகள் உள்ளது என்றாலும் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற நிலைக்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
எண்ணெய் நிறுவனப் பங்குகள்
மேலும் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வரும் முதலீட்டாளர்கள் எண்ணெய் நிறுவனப் பங்குகளை அதிகளவில் வாங்கும் போது அதிக லாபங்களைப் பார்க்கலாம்.
எந்தத் துறை/நிறுவனப் பங்குகளை எல்லாம் வாங்கலாம்?
இந்தியாவிலிருந்து ஐடி, பார்மா, ஆட்டோமொபைல் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் இந்த நிறுவனங்களின் பங்குகள் எல்லாம் விலை உயரவும் வாய்ப்புகள் உள்ளது.
தங்கம்
கச்சா எண்ணெய் விலை உயரும் போது மற்றும் ரூபாய் மதிப்பு சரியும் போது அதில் தங்கமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியா போன்று கச்சா எண்ணெயினை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அவர்கள் கரன்சி மதிப்புச் சரியும்போது தங்கம் மிகப் பெரிய சொத்தாக அமையும். தங்கத்தினை விற்று ரூபாய் மதிப்பு சரிவின் தாக்கத்தினைக் குறைக்க அரசு முயலும்.
பெட்ரோல் விலை உயரும்
ரூபாய் மதிப்பு சரியும் போது கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான செலவுகள் அதிகரித்து, பெட்ரோல், டீசல் மீதான விலை மேலும் உயரும் அபாயமும் உள்ளது. ஏற்கனவே அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசிய தேவை பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது.