2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது, இதன் பின்பு 2016-ல் அதிமுக ஆட்சியில் தமிழ் நாட்டின் கடன் ரூ. 2.28 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.
2021-ல் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டது. 2021 -22 இடைக்காலப் பட்ஜெட்டின் படி தமிழகத்தின் கடன் சுமை 5,70,189 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டின் கடன் சுமை
ஒரு பக்கம் மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்து வரும் நிலையில், அரசுக்கு வருமானம் ஈட்டும் வழிகள் கடந்த 10 ஆண்டுகளில் முடங்கியுள்ளது எனத் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
2,63,976 ரூபாய் கடன்
இதன் மூலம் தற்போது தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் சுமார் 2,63,976 ரூபாய் அளவிலான கடன் சுமை இருப்பதாக பழனிவேல் தியாகராஜன் கூறினார். இந்த நிலையைச் சமாளிக்கக் கட்டாயம் ஒரு வலிமையான கட்டமைப்பு தேவை.
தமிழ்நாட்டின் மும்முனை செயல்பாடுகள்
தமிழ்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், நிதி நிலை ஆகியவற்றை மேம்படுத்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான ஒரு அணியும், மாநில வளர்ச்சி குழு துணைத் தலைவராக ஜெயரஞ்சன் தலைமையிலான ஒரு அணியும், பொருளாதார ஆலோசனை குழு வாயிலாக ரகுராம் ராஜன் தலைமையிலான ஒரு அணியும் மும்முனையில் இயங்க உள்ளது.
அனுபவம், கடமை
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஜெயரஞ்சன் உட்பட அனைவரும் பொருளாதாரம் மற்றும் நிதியியல் துறையில் பட்டம் பெற்றது மட்டும் அல்லாமல் பல வருடங்கள் இத்துறையில் அனுபவம் பெற்றவர்கள். மேலும் அனைவரும் தமிழ்நாட்டின் மீதும், அதன் வளர்ச்சி குறித்தும் தொடர்ந்து பல யோசனைகளைத் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார ஆலோசனை குழு
மேலும் 16வது சட்டசபை கூட்டத்தொடரில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஆலோசனை வழங்கத் தமிழ்நாடு - இந்தியா - சர்வதேச சந்தை ஆகிய மூன்றிலும் ஒன்றிணைந்த வளர்ச்சியைப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
5 பேர் கொண்ட குழு
இக்குழுவில் ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், வறுமையைத் தீர்க்கும் வழிகளைக் கண்டறிந்ததிற்கு நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ, இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், இந்தியாவில் சமூக நலத்திற்காகவும், பாலின சமத்துவமின்மை-க்கு எதிராகவும் பணியாற்றி வரும் பொருளாதார வல்லுனரான ஜீன் ட்ரெஸ், அரசுக்கு வருவாய் ஈட்டும் வழிகளைக் கண்டறியும் இந்தியாவின் முன்னாள் நிதித்துறைச் செயலர் எஸ். நாராயணன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
எஸ்தர் டப்லோ
தமிழ்நாட்டு மக்களை வறுமையில் இருந்து மீட்டு எடுப்பதற்காகவும், அவர்களின் வாழ்வியலை மேம்படுத்துவதற்காகவும் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ நியமிக்கப்பட்டு உள்ளார்.
கல்வி, சுகாதாரம், மருத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய வறுமை ஒழிப்பை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை எஸ்தர் டப்லோ உட்பட மூவர் அடங்கிய குழு ஆராய்ச்சி செய்தது 2019ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூலம் அங்கீகரிக்கப்பட்டது.
அதேபோல் வறுமை ஒழிப்பு என்பதும் இன்று திட்டம் அறிவித்து நாளை தீர்ப்பது இல்லை, சரியான திட்டம் வகுத்தல் மூலம் நீண்ட கால அடிப்படையில் சரி செய்ய வேண்டிய மிக முக்கியமான ஒன்று, அதற்கு சரியான திட்டமிடல் கட்டாயம் தேவை. இதுவும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.
தமிழ்நாடு டூ சர்வதேச சந்தை
இந்த ஐவர் கூட்டணி தமிழ்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மாநில அளவில் இல்லாமல் சர்வதேச அளவிற்கு உயர்த்த முடியும் என அனைவராலும் நம்பப்படுகிறது. இக்குழுவிற்குத் தற்போது நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை ஒரு Road Map ஆக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
பொருளாதாரம் முக்கியம்
எனவே ஒரு பக்கம் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான அணி, இன்னொரு மக்கள் ஜெயரஞ்சன் தலைமையிலான அணி, மற்றொருபுறம் ரகுராம் ராஜன் தலைமையிலான அணி என மும்முனையில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பணிகள் நடந்து வருகிறது. இக்குழுவின் திட்டங்கள், செயல்பாடுகள் அடுத்தப் பட்ஜெட்-ல் தான் தெரியும்.
இது திருத்தப்பட்ட பட்ஜெட் மட்டுமே
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு கூட்டத்திலும், அதற்கு முன்பும் தெரிவித்த வகையில் இது வெறும் 6 மாதத்திற்கான பட்ஜெட் மட்டுமே என்பதால் இது ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட் ஆக மட்டுமே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.