ஆரம்ப காலத்தில் ஐடி துறை என்றாலே ஒரு அச்சம் இருக்கும். திடீரென பணி நீக்கம் இருக்குமே என்று. ஆனால் இன்று அது அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றிய காலம் போய், தற்போது நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் அதிகமாக வெளியேறி வருகின்றனர். இது தி கிரேட் ரிசைக்னேஷன் என்று கூறப்படுகின்றது.
உண்மையில் கொரோனா நமக்கெல்லாம் கற்றுக் கொடுத்த பாடங்களில் இரண்டு மறக்க முடியாத பாடங்களில் ஒன்று தி கிரேட் ரெசசன் மற்றும் தி கிரேட் ரெசிக்னேஷன் என்பது முக்கியமானது.
குறிப்பாக ஐடி நிறுவனங்களில் வழக்கத்திற்கு மாறாக கொரோனாவுக்கு முன்பை விட, நல்ல வளர்ச்சி விகிதத்தில் உள்ளன. பல புதிய ஒப்பந்தங்களை போட்டு வருகின்றன. ஊழியர்களுக்கும் பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன.
சலுகைகள் எடுபடவில்லை
ஒரு சில நிறுவனங்கள் வருடத்தில் இருமுறை சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ் என கொடுத்து அசத்தி வருகின்றன. ஆனால் இவை எதுவும் ஐடி ஊழியர்கள் மத்தியில் எடுபடவில்லை என்றே கூறலாம். ஏனெனில் தொடர்ந்து இன்றளவிலும் ஐடி நிறுவனங்களின் மிகப்பெரிய சவாலான விஷயமே அட்ரிஷன் விகிதம் தான். அந்தளவுக்கு தொடர்ந்து ஊழியர்கள் வெளியேறி வருகின்றனர்.
தி கிரேட் ரெசிக்னேஷன்
கடந்த 12 மாத காலம் என்பது தி கிரேட் ரிசைக்னேஷன் காலமாக பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இந்த காலகட்டத்தில் ஊழியர்கள் பணியில் இருந்து வெளியேறும் விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. குறிப்பாக இந்த போக்கானது ஐடி துறையில் மிக அதிகளவில் எட்டியுள்ளது. ஊழியர்கள் தற்போதைய நிலையை விட, மேம்பட வாய்ப்பு கிடைக்கும்போது வேலையை விட்டு வெளியேறுகின்றனர்.
என்ன காரணம்
இது நடப்பு ஆண்டில் பல சவால்களை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐடி துறையினை பொறுத்தவரையில் திறனுள்ள ஐடி ஊழியர்களை பணியமர்த்துவது என்பது 52% அதிகரித்துள்ளது. இதே மற்றொரு அறிக்கையில் கடந்த 12 மாதங்களில் தங்களது வேலையினை மாற்றிவர்களில் 59% பேர், அதிக சம்பளம் உள்ளிட்ட பல காரணங்களை சுட்டிக் காட்டி மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வேலை மாற்றம்
உலகம் முழுக்க தேவை அதிகம் உள்ள நிலையில் ஊழியர்களின் வெளியேறும் விகிதமானது அதிகரித்துள்ளது. குறிப்பாக சம்பளம் அதிகம், ஹைபிரிட் ஒர்க் மாடல், நெகிழ்வான நேரம், வேலைசெய்யும் சூழல், உள்ளிட்ட பலவும் ஊழியர்களை நிறுவனங்களில் இருந்து வெளியேற தூண்டுகின்றன. இதனால் நிறுவனங்களில் அட்ரிஷன் விகிதமானது அதிகரித்துள்ளது. இது ஐடி துறையில் மட்டும் அல்ல, உற்பத்தி, பார்மா துறைகளிலும் நிலவி வருகின்றது.
பல புதிய வாய்ப்புகள்
நிறுவனங்கள் பலவும் எங்கிருந்து வேண்டுமானாலும் பணி புரியலாம் என்ற கலப்பின வேலை மாதிரிக்கு நகர்ந்துள்ளன. இதன் காரணமாக திறன் வாய்ந்த தொலைதூர பணியார்களுக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. எப்படியிருப்பினும் ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் பெற்ற திறன் மிக்க ஊழியர்களுக்கு தேவை அதிகமாகவே உள்ளது. ஆக திறன்மிக்கவர்கள் எப்போது வேண்டுமானாலும் பணியில் இணைந்து கொள்ளலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
அமெரிக்கா நிலவரம்
உதாரணத்திற்கு நவம்பர் 2021 காலகட்டத்தில் மட்டும் 4.5 மில்லியன் ஊழியர்கள் தங்களது பணியினை இழந்துள்ளதாக அமெரிக்காவின் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 3% ஊழியர்கள் தங்களது பணியினை விட்டு வெளியேறி வருகின்றனர். அமெரிக்காவில் 2021ல் மட்டும் அமெரிக்காவில் 75.5 மில்லியன் மக்கள் வெளியேறியுள்ளனர் என மதிப்பீடுகள் கூறுகின்றன. இதற்கிடையில் 2022ல் 23% பணியாளர்கள் புதிய பணியினை தேடுவார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிலை என்ன?
இந்தியாவில் நிலைமை அவ்வளவாக மோசமாக இல்லை. ஆனால் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்ற கவலை இருந்து வருகின்றது. ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் ஒரு புறம் வெளியேறி வந்தாலும், மறுபுறம் புதியதாக பெரும் அளவில் பணியமர்த்தலை தொடர்ந்து வருகின்றது. 2021ம் ஆண்டில் டாப் 5 நிறுவனங்கள் 1.7 லட்சம் பணியமர்த்தியுள்ளன. இது நடப்பு ஆண்டில் இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
தாக்கம்
இந்த ரெசிக்னேஷன் காலம் ஊழியர்களுக்கு சிறந்ததொரு சம்பளம், நல்ல வாய்ப்புகளை வழங்க ஊக்குவிக்கிறது. பெரிய நிறுவனங்கள் திறனுள்ள ஊழியர்களை கவர அதிக சம்பளத்தினை கொடுத்து வருகின்றன. இதற்கிடையில் போட்டிக்காக இந்தியாவில் சர்வதேச நிறுவனங்கள் அதிகளவில் பணியமர்த்தலை தொடங்கியுள்ளன. ஆக இதுவும் ஊழியர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன. மொத்தத்தில் தற்போதைக்கு இந்த ரிசைக்னேஷனால் ஊழியர்களுக்கு பிரச்சனை இல்லை. எனினும் இது எதிர்காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர வழிவகுக்கலாம்.