கொரோனா தொற்றுக் காரணமாகத் தினமும் பலர் இந்தியாவில் உயிரிழந்து வருகின்றனர், இறந்தவர்களை எந்த வகையிலும் யாராலும் ஈடு செய்ய முடியாது. ஆனால் இறந்தவர்களின் குடும்பம் நிதி சுமையில் இருந்தால், இந்தச் சுமையில் இருந்து வெளிவருவதற்கு இந்த இன்சூரன்ஸ் தொகை பயன்படும்.
கொரோனா தொற்று மூலம் யாரேனும் உயிரிழந்து இருந்தால் அரசு இன்சூரன்ஸ் திட்டம் வாயிலாக இறந்தவரின் குடும்பம் அல்லது நாமினிக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீட்டுத் தொகை கிடைக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா (PMJJBY)
மத்திய அரசு மே 9, 2015ல் 18 முதல் 50 வயதுடைய வங்கி கணக்காளர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான டேர்ம் இன்சூரன்ஸ் தொகை கொண்ட இன்சூரன்ஸ் திட்டத்தைப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா (PMJJBY) பெயரில் இந்தியா முழுவதும் வழங்கியது.
கொரோனா தொற்று மூலம் இறப்பு
இந்தச் சூழ்நிலையில் 2020-21ஆம் நிதியாண்டில் இந்த இன்சூரன்ஸ் பெற்றுள்ள யாரேனும் கொரோனா தொற்று மூலம் இறந்திருந்தால், அவரது நாமினி அல்லது துணைவர் அல்லது துணைவியர் 2 லட்சம் ரூபாய்க்கான இன்சூரன்ஸ் தொகையைப் பெற முடியும்.
டேர்ம் இன்சூரன்ஸ் திட்டம்
டேரம் இன்சூரன்ஸ் என்பதால் ஒவ்வொரு வருடமும் இதை ரென்யுவெல் செய்ய வேண்டும், இதேபோல் இந்த டேர்ம் இன்சூரன்ஸ் திட்டம் லைப் கவர் அளிக்கும் காரணத்தால் 2020-21ஆம் நிதியாண்டில் மரணம் அடைந்தவர்கள் இத்திட்டத்தின் மூலம் 2 லட்சம் ரூபாய் வரையிலான இன்சூரன்ஸ் தொகையைப் பெற முடியும்.
2 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ்
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா (PMJJBY) திட்டத்தின் கீழ் தற்போது கொரோனா மூலம் ஏற்பட்ட இறப்பும் ஏற்றுக்கொள்ளப்படும் காரணத்தால் இறந்தவரின் குடும்பம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான இன்சூரன்ஸ் தொகையைப் பெற முடியும். சரி இன்சூரன்ஸ்-ஐ இறந்தவர் பெற்றுள்ளாரா..? என்பதை எப்படித் தெரிந்துக்கொள்ளவது..?!
PMJJBY திட்டம்
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா (PMJJBY) திட்டத்தின் டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்திற்கான ப்ரீமியம் தொகை 330 ரூபாய். மேலும் திட்டம் ஜூன் 1 முதல் 31 வரையிலான காலக்கட்டத்தில் அட்டவணையில் இயங்குகிறது.
வங்கி கணக்கின் வருடாந்திர கணக்கு அறிக்கையை
இதன் மூலம் கொரோனா தொற்று காரணமாகவோ அல்லது பிற காரணங்கள் மூலம் யாரேனும் இறந்திருந்தால், அவரின் வங்கி கணக்கின் வருடாந்திர கணக்கு அறிக்கையைப் பார்க்க வேண்டும். இதில் 330 ரூபாய் தொகையைப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா (PMJJBY) அல்லது வேறு ஏதேனும் பெயரில் கழிக்கப்பட்டு இருந்தால் அதனைத் தத்தம் வங்கியில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து இன்சூரன்ஸ் தொகையைக் கிளைம் செய்யலாம்.
330 ரூபாய் ப்ரீமியம் தொகை
மேலும் PMJJBY திட்டத்தின் ப்ரீமியம் தொகை நாம் செலுத்திய காலாண்டைப் பொருத்து மாறும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் செலுத்தி இருந்தால் ஆண்டு முழுவதுக்கும் காப்பீடு கிடைக்கும். இதன் மூலம் 330 ரூபாய் செலுத்தப்பட்டு இருக்கும்.
டேர்ம் இன்சூரன்ஸ் தொகை மாறுபடும்
இதேபோல் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதத்தில் செலுத்தி இருந்தால் 258 ரூபாய், டிசம்பர், ஜனவரி பிப்ரவரி செலுத்தி இருந்தால் 172 ரூபாய், இதுவே மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் செலுத்தியிருந்தால் 86 ரூபாய்.
தேவையான ஆவணங்கள்
மேலும் இத்திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாய்க்கான இன்சூரன்ஸ் தொகையைக் கிளைம் செய்ய வேண்டும் என்றால் சில முக்கியமான ஆவணங்கள் தேவை. இதன் படி கிளைம் படிவம், இறப்புச் சான்றிதழ், டிஸ்சார்ஜ் சம்மரி, ரத்துச் செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றைச் சமர்ப்பித்து வங்கி நிர்வாகம் அல்லது இன்சூரன்ஸ் நிர்வாக ஒப்புதல் அளித்து 30 நாட்களுக்குள் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.