கொரோனா வைரஸின் தாக்கத்தை விளக்கத் தேவை இல்லை. சுமார் 10.15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 53,000 பேர் மரணித்து இருக்கிறார்கள்.
சரி விஷயத்துக்கு வருவோம். நாம் வாங்கும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுகள் பெரும்பாலும் இப்போது ஹோம் டெலிவரி வழியாக பெற்றுக் கொண்டு இருக்கிறோம்.
இந்த பொருட்கள் மற்றும் உணவுகளை கொரோனா பாதிப்பு இல்லாமல் (Corona-Proof) பெற்று பயன்படுத்துவது எப்படி என்று தான் பார்க்கப் போகிறோம்.
ஆதாரம் இல்லை
இதுவரை இந்த கொடிய கொரோனா வைரஸ் உணவுகள் வழியாக பரவுகிறது என ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. சரியாக உணவை சமைத்தால் வைரஸ் இறந்துவிடுமாம். ஆனால் உடனடியாக சமைத்துச் சாப்பிடும் பேக்கெட் உணவுகள் (எ.கா: இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்) மற்றும் பார்சல் உணவுகள், அவர்களுக்கே தெரியாமல் கொரோனாவைப் பரப்பும் ஒரு மீடியமாக இருக்கலாம் எனச் செய்திகள் வெளியாகின்றன. இந்த பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது.
72 மணி நேரம்
முதலில் ரெடி டூ ஈட் ரக உடனடி விரைவு உணவுகளில் இருக்கும் கொரோனா தொற்றுக்களை எப்படி சமாளிக்கலாம் எனப் பார்ப்போம். ஒரு பொருள் மீது 72 மணி நேரம் தான் அந்த வைரஸ் உயிரோடு இருக்கும் எனச் சொல்கிறார்கள். எனவே எந்த ஒரு பேக்கெட் உணவுப் பொருளை வாங்கினாலும் 72 மணி நேரம் கழித்துப் பயன்படுத்தினால் கொரோனா பரவலை பெரிய அளவில் குறைத்துவிடலாம்.
இன்னொரு ஐடியா
பொருட்களை வாங்கிய உடன், பொருட்களை பேக் செய்ய பயன்படுத்தி இருக்கும் பேப்பர், கவர் போன்றவைகளை எல்லாம் பிரித்து பொருட்களை, உங்கள் வீட்டு பாத்திரங்களில் வைத்துக் கொள்ளலாம். பீட்ஸா போன்ற விரைவு உணவுகளை வாங்கினால் குறைந்தது 2 நிமிடங்களாவது மைக்ரோ வேவ் அவனில் சூடுபடுத்திச் சாப்பிடுங்கள்.
காய் கனிகள்
பேக்கெட் உணவுகள் மற்றும் பொருட்களை ஒரு பக்கம் வைத்துவிடுங்கள். காய்கறிகள் பழங்கள் போன்றவைகள் பேக்கெட் செய்யப்பட்டு வருவதில்லை. எல்லாமே திறந்த வெளியில் வைக்கப்பட்டு தான் விற்கப்படும். எனவே இந்த காய் கனிகளை, தண்ணீர் குழாயை திறந்துவிட்டு ஒரு சில நிமிடங்கள் வையுங்கள். அதன் பின் சில நிமிடங்கள் தண்ணீரை வடிய விடுங்கள். இதனாலும் கொரோனா தொற்று கணிசமான அளவில் குறையும் என்கிறார்கள்.
பார்சல் உணவுகள்
உணவுகளை பார்சல் செய்கிறார்கள் என்றால், பார்சல் செய்ய பயன்படுத்தும் பாத்திரங்களை, பாத்திரங்களில் அறிவுறுத்தி இருக்கும் விதத்தில் ப்ளீச் (Bleach) செய்யச் சொல்கிறார்கள். இதனால் பார்சல் உணவுகள் மற்றும் பார்சல் பாத்திரங்கள் வழியாக கொரோனா வைரஸ் பரவல் பெரிய அளவில் குறையுமாம். இதை மருத்துவர்களும் ஆமோதித்து இருக்கிறார்கள்.
ஜேம்ஸ் கில் (James Gill)
இங்கிலாந்தில் இருக்கும் வார்விக் மருத்துவப் பள்ளியைச்(Warwick Medical School) சேர்ந்த ஜேம்ஸ் கில் "ஒரு பொருளின் மேல் பரப்பை நாம் வீட்டில் பயன்படுத்தும் அடர்த்தி குறைந்த ப்ளீச்சிங் பவுடரை (Diluted Bleach) பயன்படுத்தினாலே, அடுத்த ஒரு நிமிடத்தில் வைரஸ் செயல் இழந்து விடும்" எனச் சொல்கிறார்.
டெலிவரி பாதுகாப்பு
அத்தியாவசியப் பொருட்கள், உணவுகள் போன்றவைகளை ஹோம் டெலிவரிக்குச் சொன்ன பின், டெலிவரி ஆட்கள் கால் செய்யும் போது, அவர்களை நம் வீட்டு வாசலில் பொருட்களை வைத்துவிட்டு, நம் காலிங் பெல்லை (அழைப்பு மணி) அடித்துவிட்டுப் போகச் சொல்லுங்கள். அதன் பின், உங்கள் ஹோம் டெலிவரி பொருட்களை ஒரு சில நிமிடங்கள் கழித்து எடுத்துக் கொள்ளலாம் இப்படியும் சமூக விலகளை தீவிரமாக கடைபிடித்து கொரோனாவில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.