இந்திய டெலிகாம் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் இயங்கும் வேளையில் சீன டெலிகாம் நிறுவனங்களான ZTE மற்றும் ஹூவாய் இந்தியாவில் பணியில் அமர்த்திய ஊழியர்களில் 90 சதவீத பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளது.
இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு அடுத்தடுத்து நெருக்கடி உருவாகி வரும் வேளையில், ZTE Corp மற்றும் Huawei Technologies ஆகிய இரு நிறுவனங்களுக்கு உலகளவில் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இதே வேளையில் இந்தியாவில் ஏற்பட்ட மோசமான வர்த்தகச் சூழ்நிலை காரணமாக இந்திய ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது இந்தச் சீன நிறுவனங்கள்.
மத்திய அரசு
மத்திய அரசின் கடுமையான நெருக்கடி மற்றும் கடுமையான கொள்முதல் விதிகள் மூலம் ZTE Corp மற்றும் Huawei Technologies கடந்த சில வருடத்தில் புதிய வர்த்தகத்தைப் பெற முடியாமல் தவிக்கிறது.
5ஜி சேவை
இதேவேளையில் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் 5ஜி சேவை பிரிவிலும் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் நோக்கியா, எரிக்சன் போன்ற நிறுவனங்களிடம் டெலிகாம் உபகரணங்களை வாங்க ஒப்பந்தம் செய்த காரணத்தால் ZTE மற்றும் ஹூவாய் புதிய வர்த்தகத்தைப் பெற முடியவில்லை.
90% பேர் பணிநீக்கம்
இதனால் இவ்விரு சீன நிறுவனங்களும் தனது இந்திய வர்த்தகத்தில் நியமிக்கப்பட்டு இருந்த ஊழியர்களில் 90 சதவீத பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. மத்திய அரசு சீன மொபைல் செயலிகளைத் தடை செய்த போது இதேபோன்று அதிகப்படியான இந்திய ஊழியர்களைச் சீன நிறுவனங்கள் பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
ZTE, Huawei
தற்போதைய சந்தை தரவுகள் படி ZTE வெறும் 150 ஊழியர்களுடனும், Huawei 200 ஊழியர்களுடன் மட்டுமே இயங்கி வருகிறது. 2020 இறுதியில் ZTE நிறுவனத்தில் 1000 ஊழியர்களையும், ஹூவாய் 1500 ஊழியர்களையும் வைத்துக்கொண்டு இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-சீனா எல்லை பிரச்சனை
இந்தியா-சீனா எல்லை பிரச்சனைகளுக்கு மத்தியில், கடந்த ஆண்டு மத்திய அரசு அனைத்து தொலைத்தொடர்பு உபகரணப் பொருட்களையும் கடுமையான ஸ்கிரீனிங் செயல்முறைக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
டெலிகாம் உபகரணம்
சீன டெலிகாம் உபகரண நிறுவனங்களால் இணையப் பாதுகாப்புத் தொடர்பான சந்தேகங்கள் உள்ளதால் 'நம்பகமான ஆதாரங்கள்' 'நம்பகமான தயாரிப்பு' எனக் குறிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே டெலிகாம் உபகரணங்களைக் கொள்முதல் செய்ய வேண்டும் மற்றும் கியர் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.
வரி ஏய்ப்பு வழக்கு
ZTE மற்றும் ஹூவாய் இன்னும் 'நம்பகமான ஆதாரங்கள்' 'நம்பகமான தயாரிப்பு' என்ற டேக் பெறாத நிலையில், இவ்விரு நிறுவனங்களும் தற்போது வருமான வரித் துறையில் வரி ஏய்ப்பு வழக்கில் மாட்டிக்கொண்டு உள்ளது. இந்தியாவில் இவ்விரு நிறுவனங்களும் தற்போது 2020க்கு முன்பு பெற்ற வாடிக்கையாளர்களுக்குச் சர்வீஸ் செய்து வருகிறது.
சீன நிறுவனங்கள்
இந்தியாவில் வர்த்தகம் செய்யும் சீன நிறுவனங்கள் அடுத்தடுத்து வரி ஏய்ப்பு வழக்கில் மாட்டிக்கொண்டு வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் அதிகளவில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் டெலிகாம் உபகரண நிறுவனமான ஹூவாய் சிக்கியுள்ளது. இதேவேளையில் இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான கடன் மோசடிகள் சீனர்களையும், சீன நிறுவனங்களையும் தொடர்புடையதாக உள்ளது.