ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை ரெப்போ வட்டி விகிதத்தை 4.4 சதவீதமாக உயர்த்திய உடன், ஹோம் லோன், வாகன கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்களின் வட்டி விகிதம் விரைவில் உயரும் என தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்தில் தெரிவித்து இருந்தோம்.
அதை உறுதி செய்யும் விதமாக ஐசிஐசிஐ வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா வங்கிகள் ஹோம் லோன் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி இணையதளத்தில் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகித கொள்கை அறிவிப்பின் படி, I-EBLR வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 8.10 சதவீதம் என 2022,மார்ச் 4-ம் தேதி முதல் உயர்த்துவதாக அறிவித்தது.
EBLR என்றால் என்ன?
EBLR என்பது ரெப்போ வட்டி விகிதம் போல வெளிப்புற அளவுகோல்களின் அடிப்படையில் வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட கடன் விகிதமாகும். வணிக வங்கிகள் கடன் வழங்கக்கூடிய குறைந்தபட்ச வட்டி விகிதம் இதுவாகும். 2019-ம் ஆண்டு வரை இதை MCLR வட்டி விகிதம் என அழைத்து வந்தனர்.
எவ்வளவு வட்டி உயருகிறது?
இதை வைத்து பார்க்கும் போது ஐசிஐசிஐ வங்கியில் குறைந்தபட்ச கடன் வட்டி விகிதம் 8.10 சதவீதம் வரை உயருகிறது. இதுவே மே 3-ம் தேதி வரை 7.15 சதவீதமாக இருந்தது.
பாங்க் ஆப் பரோடா வங்கி
பாங்க் ஆப் பரோடா வங்கி மே 5-ம் தேதி முதல் தங்களது வீட்டுக் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை 6.90 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
பிற வங்கிகள்
ஐசிஐசிஐ மற்றும் பாங்க் ஆப் பரோடா வங்கிகள் வட்டி உயர்வு அறிவிப்பை வெளியிட்டுவிட்டதால், பிற முக்கிய வங்கிகளும் விரைவில் கடன் திட்டங்கள் மீதான வட்டியை உயர்த்துவார்கள் என்பது உறுதி.
எப்போது மீண்டும் வட்டி விகிதம் குறையும்?
ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் மீண்டும் எப்போது ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கலாம் என முடிவு எடுக்கிறார்களோ அப்போதுதான் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறையும்.
பிக்சட் டெபாசிட்
கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தியதை போல பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தையும் ஐசிஐசிஐ வங்கி 0.25% வரை உயர்த்தி இருப்பது ஆறுதல் செய்தியாக உள்ளது.