சென்னை: தெரிந்தவர்களுக்கு அவசரத்துக்கு கடன் கொடுத்துவிட்டு திரும்ப வாங்க முடியாமல் பலரும் தவிக்கிறார்கள். கடன் வாங்கியவர்கள், நிதி நெருக்கடி காரணமாக தாராமல் போவதால் பலர் மனஉளைச்லுக்கு ஆளாகிறார்கள். பணத்தை திரும்ப வாங்குவதற்கு உள்ள நடைமுறை என்ன, அதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
கடன், இந்த தேசத்தின் அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் தினசரி சொல். வங்கியில், நிதி நிறுவனங்களே கடன் கொடுத்தவர்களிடம் திரும்பி வாங்க முடியாமல் படாத பாடுபடுகின்றன.
இத்தனைக்கும் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் வாங்கியவர் கடனை கட்டும் அளவுக்கும் பொருளாதார ரீதியாக பலம் உடையவரா, அவரிடம் கொடுத்தால் பணம் திரும்ப வருமா? ஏற்கனவே கடன் வாங்கி ஏமாற்றியவரா? அவருடைய நன்மதிப்பு என்ன என்று தீர ஆராய்ந்துதான் கடன் கொடுக்கின்றன.
வட்டிக்கு கடன்
அப்படி சட்டப்பூர்வமாக வங்கிகள் அளிக்கும் கடன்களையே பலர் தராமல் இழுத்தடித்து, அபராதங்களை சந்தித்து நெருக்கடிக்கு பின்னர் தருகிறார்கள். இந்த சூழலில் தனிநபர்களிடம் வாங்கிய கடன்களை பலர் முறையாக திரும்பி தருவது இல்லை. இந்த சூழலில் வட்டிக்கு கடன் கொடுத்துவிட்டு, அதை திரும்ப வாங்க முடியாமல் பலர் தவிப்பதை பார்க்க முடியும்.
அவசர கடன்
சொத்துக்கள் எதுவும் இல்லாதவருக்கு நம்பிக்கையின் அடிப்படையில் அவசர தேவைக்கு 40 ஆயிரமோ அல்லது 50 ஆயிரமோ சிலர் கடன் தருகிறார்கள். ஏன் 10 ஆயிரம் முதல் லட்சம் வரை கூட கடன் தருகிறார்கள். அப்படி தரும் கடன்களுக்கு எந்த உறுதிமொழிப் பத்திரமும் எழுதி வாங்குவது இல்லை. இப்படிப்பட்ட சூழலில் அவரிடம் கடனை எப்படி திருப்பி வாங்குவது என்று வழி தெரியாமல் சிலர் தவிப்பார்கள்.
கடனை தொகை வசூல்
கடனை திரும்பி தர முடியாது உன்னால் முடிந்தை பார் என்று சிலர் மறுக்கும் சூழலும் உள்ளது. இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் பலன் இல்லாத நிலை இருக்கும் அப்படிப்பட் கடன்காரர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க வழி உள்ளதா? என்பதை இப்போது பார்ப்போம்.
சட்டம் சொல்வது என்ன?
நீங்கள் கடன் கொடுத்தவருக்கு பணத்தை ஆன்லைன் வாயிலாக கொடுத்திருந்தால் மிக எளிதாக இருக்கும். இதேபோல் நீங்கள் பணம் கொடுத்தது தொடர்பான தொலைப்பேசி உரையாடல் தேதி மற்றும் நேரமும் மிக முக்கியமாகும். நீங்கள் வட்டி வாங்கும் நோக்கத்தோடு பணம் தரவில்லை என்பது மிக முக்கியமாகும். இவை சரியாக இருந்தால் இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872-படி நீங்கள் யாருக்கு கடன் கொடுத்தீர்களோ அவர்கள் மீது வழக்கு தொடரலாம். இந்திய ஒப்பந்தச் சட்டம் உட்பிரிவு 2 (ஹெச்)-ன்படி, செயல்படுத்தக்கூடிய ஒவ்வோர் உடன்படிக்கை மற்றும் வாக்குறுதி என்பது ஒப்பந்தமாகும். இதன்படி, சிவில் கோர்ட்டில் அவர் மீது வங்கி கணக்குகளை காட்டி வழக்கு தொடரலாம்.
திவால் ஆனவருக்கு தர கூடாது
இதில் உள்ள சிக்கலையும் புரிந்து கொள்ளுங்கள். பணம் வாங்கியவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடாது , சுயமாகச் சிந்தித்துச் செயல்பட முடியாதவர், பணம் வாங்கும்போது மது அருந்தியிருந்தாலோ அல்லது, திவாலானவர் என்றால் அவரிடமிருந்து பணத்தைத் திரும்பிக் கேட்க முடியாது இதுதான் சட்டரீதியாக உள்ள நடைமுறை. எனவே அவசரத்துக்கு கடன் கொடுக்கும் முன் கவனமாக இருப்பது நல்லது. இல்லாவிட்டால் சிக்கல் உங்களுக்குத்தான்.