நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதார வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகின்றது.
இதற்கிடையில் பல லட்சம் பேர் தங்களது வேலை வருவாயினை இழந்து தவித்து வருகின்றனர். பல ஆயிரம் பேர் சம்பள குறைப்பு என பல பிரச்சனைகளில் இருந்து வருகின்றனர்.
எனினும் தற்போது தான் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், இனி சற்று பிரச்சனை குறையும் என்றும் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
நிகர வருமானம் பூஜ்ஜியம்
ஆனால் Indian federation of app based workers நடத்திய ஆய்வில், கடந்த மே மாதத்தில் இருந்து லாக்டவுனில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்ட போதும், சுமார் 70% போக்குவரத்து மற்றும் விநியோக தொழிலாளர்கள் பூஜ்ஜிய நிகர வருமானத்துடனே உள்ளனர். அதேசமயம் 20% பேர் வாரம் 500 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரையில் சம்பாதித்து வருகின்றனர் என தெரியவந்துள்ளது.
செலவினங்கள் மிச்சம் இல்லை
அதாவது எரிபொருள் செலவினங்கள். வங்கி இஎம்ஐ மற்றும் வாரத்திற்கான கமிஷன்கள் போக எஞ்சியிருப்பது இது தான். இதில் ஓலா, உபெர் டிரைவர்கள், இதே ஸ்விக்கி, சோமேட்டோ, ராபிடோ, டன்சோ உள்ளிட்ட பல நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்களும் இதில் அடங்குவர்.
எந்த உதவியும் கிடைக்கவில்லை
இதில் மிக கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் தொற்று நோயால் எந்தவொரு வருமானமும் இல்லாத நிலையில், கிட்டதட்ட 90% போக்குவரத்து மற்றும் டெலிவரி ஊழியர்கள் எந்த மளிகை அல்லது உணவு உதவியையும் பெறவில்லை என்பது தான். அதே சமயம் 85% நிறுவனங்களும் அரசாங்கத்திடம் இருந்து எந்த நிதி உதவியும் பெறவில்லை என்றும் இந்த சர்வே அறிக்கை கூறுகின்றது.
வருமானம் என்ன? செலவு எவ்வளவு?
இந்த ஓட்டுனர்களுக்கு லாக்டவுனின் போது பெரும்பாலானவர்களுக்கு வருவாய் இல்லை என்றாலும், ஏப்ரல் 15, 2020 பிறகு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, பதிலளித்தவர்களில் 57% பேர் வாரத்திற்கு 0 - 2250 வரை மட்டுமே சம்பாதித்ததாக கூறியுள்ளனர். இது தொழிலாளர்களின் நிலையை இன்னும் மோசமாக்குகிறது. ஏனெனில் இந்த தொழிலாளர்கள் தங்கள் வாகனங்களுக்கான மாத தவணை தொகையாக சுமார் 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை செலுத்த வேண்டியுள்ளதாக அறிக்கையில் தெரிய வந்துள்ளது.