இந்தியாவில் பிறந்து வளரும் சராசரி குழந்தைகளுக்கு ஐஐடி, ஐஐஎம் போன்ற பெரிய கல்லூரிகளில் ஒரு நல்ல பட்டம் பெற்று விட வேண்டும் என்கிற எண்ணம் மிகச் சிறிய வயதில் இருந்தே விதைக்கப்படுகிறது.
Recommended Video
அது மட்டும் நடந்துவிட்டால் வாழ்கை செட்டில் எனவும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஐஐடி & ஐஐஎம் போன்ற கல்லூரிகளில் சேர்ந்துவிட்டால், படிப்பை படித்து முடிப்பதற்குள்ளேயே ஒரு நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைத்துவிடும்.
அடுத்த சில வருடங்களுக்குள், திறமையை வளர்த்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனவும் பெற்றோர்களே சொல்கிறார்கள்.
கனவு வாழ்கை
ஐஐடி ஐஐஎம் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டால், உயர் நடுத்தர மக்களின் வாழ்கையில் அடிப்படை தேவையாக இருக்கும், வீடு, கார் என ஒட்டு மொத்த வாழ்கையே செட்டில் ஆகிவிடும் என்பார்கள். இந்த கனவுக்கு ஒவ்வொரு ஆண்டும், லட்சக் கணக்கான மாணவர்கள், இந்த கல்லூரிகளில் சேர தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள். காரணம் படித்து முடித்ததும் ஒரு நல்ல வேலை பிரமாதமான சம்பளம்.
சிக்கலில் வேலை
ஆனால் இந்த வருடம் ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்லூரிகளில் இருந்து படித்து முடித்து வேலைக்குப் போக இருப்பவர்களில் பலருக்கு இந்த கொடுப்பினை இல்லை போல் தெரிகிறது. காரணம் கொரோனா வைரஸ். சுமாராக 7 வாரங்களுக்கு முன்பு தான் இந்த கல்லூரிகள், தங்கள் மாணவர்களுக்கான கேம்பஸ் இண்டர்வியூக்களை முடித்தார்கள்.
மகிழ்ச்சி
வழக்கத்தை விட மாணவர்கள் நல்ல வேலைகளுக்குச் சென்று இருக்கிறார்கள், இந்திய பொருளாதாரம் மிக மந்த நிலையில் இருக்கின்ற போதும் இத்தனை வேலை வாய்ப்புகள் தங்கள் மாணவர்களுக்கு கிடைத்து இருக்கிறது என மகிழ்ச்சியில் இருந்தார்கள் ஐஐடி & ஐஐஎம் கல்லூரிகள். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
பறி போகும் வேலைகள்
ஐஐடி & ஐஐஎம் கல்லூரி மாணவர்களுக்கு வேலை கொடுத்த சில கம்பெனிகள், தாங்கள் கொடுத்த வேலை வாய்ப்புகளை பின் வாங்குவதாகச் சொல்லி இருக்கிறார்களாம். உதாரணமாக ஒரு ஆலோசனை நிறுவனம் சுமார் 18 பேருக்கு வேலை கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இப்போது 5 - 7 மாணவர்களுக்கு மட்டுமாது வேலை கொடுக்கச் சொல்லி ஐஐடி & ஐஐஎம் கல்லூரிகள் பேசிக் கொண்டு இருக்கிறார்களாம்.
கொரோனா வைரஸ்
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி, எல்லா நிறுவனங்களையும் அடித்து நொறுக்கிக் கொண்டு இருக்கிறது. எனவே, பல்வேறு நிறுவனங்கள், மேலே சொன்ன ஐஐடி & ஐஐஎம் மாணவர்களுக்கு வழங்கிய வேலை வாய்ப்புகளை மறுக்கத் தொடங்கி இருக்கிறார்களாம். இதற்கு ஒரு மாணவரின் வாழ்கையே உதாரணமாகவும் அமைந்து இருக்கிறார்.
ஐஐஎம் பட்டதாரி
இந்தியாவின் ஐஐஎம் கல்லூரி ஒன்றில் படித்து முடித்த மாணவர் ஒருவருக்கு, ஒரு சர்வதேச நிறுவனம், வேலை கொடுத்து இருக்கிறது. வரும் ஜூன் 01, 2020 அன்று வந்து வேலையில் சேரச் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அந்த மாணவரும் எல்லா அனுமதி மற்றும் விசா போன்ற டாக்குமெண்ட்களை செலவழித்து தயார் செய்து இருக்கிறார்.
மறுப்பு
அவ்வளவு ஏன் பணம் எல்லாம் செலவழித்து விமான டிக்கெட்டுகளைக் கூட புக் செய்துவிட்டார். ஆனால் கடைசி நேரத்தில், இந்த கொரோனாவைக் காரணம் காட்டி, தங்கள் அமெரிக்க வியாபாரம் மந்தமடைவதால், அந்த மாணவருக்கு கொடுத்த வேலை வாய்ப்பை திரும்பப் பெறுவதாகச் சொல்லி இருக்கிறார்கள். இப்போது விசா, விமான டிக்கெட் போன்றவைகளுக்கு செலவழித்த 2 லட்சம் ரூபாயை அந்த கம்பெனி கொடுக்குமா எனக் கேள்வி எழுப்புகிறார்.
ஐஐடி & ஐஐஎம் விதிகள்
பொதுவாக ஐஐடி & ஐஐஎம் மாணவர் ஒருவருக்கு ஒரு வேலை கிடைத்துவிட்டது என்றால், அவர் மற்ற வேலைகளுக்கான நேர்காணல்களில் கலந்துகொள்ள முடியாது. வேலை கொடுப்பதாகச் சொல்லிவிட்டு, அதன் பின் வேலை கொடுக்க வேண்டிய நிறுவனம், தேர்வு செய்த மாணவரை நீக்கினால் கூட இது தான் விதியாம். இப்போது மெரிட் அடிப்படையில் மீண்டும் இரண்டாவது முறை வேலைகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள அனுமதிக்கலாமா என ஐஐடி & ஐஐஎம் கல்லூரிகள் ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
மொத்தம் எத்தனை
இதுவரை மணி கண்ட்ரோல் வலைதளத்தில் சுமார் 40 ஐஐடி மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறி போய் இருக்கிறதாம். அதே போல சுமார் 35 ஐஐம் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் பறி போய் இருக்கிறதாம். இந்தியாவின் பிரமாதமான கல்லூரிகளாக கருதப்படும் ஐஐடி & ஐஐஎம் கல்லூரிகளுக்கே இது தான் நிலை என்றால், சாதாரண கல்லூரிகளில் படித்து முடிப்பவர்களுக்கு, இந்த ஆண்டு எப்படி வேலை கிடைக்கும் என்று தெரியவில்லை.