ஸ்வீடன் நாட்டின் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான IKEA தனது மூன்றாவது கடையை மும்பையில் வியாழக்கிழமை திறந்த நிலையில் வெள்ளிக்கிழமை விலையேற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெங்களூரு, ஐதராபாத் மற்றும் மும்பையின் இரண்டு இடங்களில் ஏற்கனவே கடையை திறந்துள்ள IKEA நேற்று இந்தியாவின் ஐந்தாவது மற்றும் மும்பையின் மூன்றாவது சில்லறை விற்பனை கடையை திறந்தது.
புதிய கடையின் மூலம், இந்த ஆண்டு மும்பையில் சுமார் 4 மில்லியன் நுகர்வோர்களை ஈர்ப்பதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மும்பையில் நேற்று திறக்கப்பட்ட கடை 72,000 சதுர அடியில் கட்டப்பட்டது என்பதும், ஷாப்பிங் மாலில் அமைந்துள்ள முதல் கடை இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை புதிய கடையின் நிலை
IKEA நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் மும்பையின் புதிய கடையில் 7,000 க்கும் மேற்பட்ட நன்கு வடிவமைக்கப்பட்ட, மலிவு விலையில் நல்ல தரமான, வீட்டு அலங்கார பொருட்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் 5,000 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கான ஆர்டர்களை ஆன்லைனில் வாங்கலாம் என்றும், அதேபோல் வாடிக்கையாளர்கள் சுமார் 2,000 தயாரிப்புகளை நேரடியாக கடைகளில் இருந்து வாங்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
உணவகம்
மும்பையின் இந்த புதிய கடையில் 150 இருக்கைகள் கொண்ட உணவகம் உள்ளதாகவும், இதில் பல சைவ உணவுகளுடன் இந்திய மற்றும் ஸ்வீடன் நாட்டின் உணவு வகைகளை சுவைக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. IKEA நிறுவனம் தனது முதல் கடையை 2020ஆம் ஆண்டு நவி மும்பையிலும், இரண்டாவது கடையை 2021ஆம் ஆண்டு மும்பையின் வோர்லியிலும் தொடங்கியது. மேலும் IKEA நிறுவனம் தங்கள் கடைகளுக்கு 76% உள்ளூர் சக ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள நிலையில் மேலும் அதிகமானவர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
விலை உயர்வு
இந்த நிலையில் மும்பையில் ஐந்தாவது கடையை திறந்த மறுநாளே IKEA தனது சில தயாரிப்புகளின் விலைகளை உயர்த்தியுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக ஒருசில பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என விளக்கம் அளித்துள்ளது.
IKEA சி.இ.ஓ விளக்கம்
IKEA இந்தியாவின் சி.இ.ஓ Susanne Pulver அவர்கள் விலை உயர்வுக்கு விளக்கமளித்தபோது, 'உலகில் நடக்கும் கொரோனா பாதிப்பு, போர் போன்ற சம்பவங்களால் யாரும் பாதிக்கப்படாமல் இருப்பதில்லை என்றும், எங்கள் நிறுவனத்திற்கும் அதே நிலை தான் என்றும் கூறினார். இருப்பினும் நாங்கள் எங்களால் முடிந்தவரை விலை உயர்வை தவிர்க்க முயற்சிக்கிறோம் என்றும் ஒருசில பொருட்களுக்கு மட்டுமே நாங்கள் சில மாற்றங்களையும் செய்துள்ளோம்' என்று அவர் கூறினார்
மலிவு விலை
ஒருசில பொருட்களின் விலை உயர்ந்தபோதிலும் பல பொருட்களை குறைந்த விலையில் நாங்கள் வழங்கி வருகிறோம் என்றும், எப்போதும் மலிவு விலையில் எங்கள் பொருட்களின் விலையை வைத்து கொள்ள முயற்சித்து வருகிறோம் என்றும், Susanne Pulver தெரிவித்துள்ளார்.