டெல்லி: உலகம் முழுக்கவுள்ள மக்கள் கொரோனாவின் தாக்கத்தினால் அரண்டு போயுள்ள நிலையில், மக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.
ஒரு புறம் மக்கள் தங்களது வருமானத்தினை இழந்து தவிக்கும் நிலையில், சர்வதேச பொருளாதாரமும் ருத்ர தாண்டவமாடி வருகிறது.
மறுபுறம் வேலையின்மையும் தனது பங்குக்கு ஆட்டம் போடத் தொடங்கியுள்ளது.
செலவினை குறைக்க திட்டம்
இப்படி கொரோனாவின் ஒட்டுமொத்த தாக்கமும் ஒவ்வொரு துறையிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதன் ஒட்டுமொத்த எதிரொலியும் மக்கள் மீது விழத் தொடங்கியுள்ளது. ஏனெனில் நஷ்டம் காணும் நிறுவனங்கள் முடிந்த அளவு செலவினை குறைக்க பணி நீக்கம், சம்பள குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
சிறந்த உதாரணமே அமெரிக்கா தான்
ஏற்கனவே உலகம் முழுக்க இது எதிரொலிக்க தொடங்கி விட்டது. இதற்கு சிறந்த உதாரணமே வல்லரசு நாடான அமெரிக்கா தான். பொருளாதாரத்தில் மட்டும் அல்ல எல்லாவற்றிலும் நாங்கள் தான் முதன்மை என்று கூறும்வகையில், உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் இருந்தாலும், அமெரிக்கா தான் இதிலும் முதன்மையாகத் திகழ்கிறது.
மக்கள் வேலையினை இழக்கலாம்
கொரோனா தாக்கத்தில் முதன்மை எனில் அங்கு அதிகரிக்கும் வேலையின்மையும் உலகின் மற்ற நாடுகளில் இல்லாத அளவும் கடந்த சில வாரங்களில் கிடுகிடுவென அதிகரித்து வருகின்றது. இப்படி ஒரு நிலையில் தான் சர்வதேச தொழிலாளர் அமைப்பு 195 மில்லியன் முழு நேர தொழிலாளர்கள் தங்களது வேலையினை இழக்கலாம் என்றும் கணித்துள்ளது.
பணி இழப்பு பல மடங்கு அதிகரிக்கலாம்
கொரோனாவினால் ஏற்படும் இடையூறுகளால் பல்வேறு துறைகளில் பணி நீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது ஜூலை - டிசம்பர் காலத்தில் உலகளவில் 6.7% பணி நேரங்கள் உலகளவில் அழிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது கடந்த 2008 - 09 ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்பினை விட அதிகம் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
எங்கு எத்தனை சதவீதம் பேர்?
இவ்வாறு பணி நீக்கம் செய்யப்படுபவர்கள் அல்லது வேலை இழப்பானது அரபு நாடுகளில் 8.1% பேர், அதாவது 5 மில்லியன் முழு நேர ஊழியர்கள் பணியினை இழக்கலாம். ஐரோப்பாவில் 7.8% பேர், அதாவது 12 மில்லியன் முழு நேர தொழிலாளார்கள், ஆசியா மற்றும் பசிபிக் 7.2% பேர், 125 மில்லியன் முழு நேர தொழிலாளர்கள் தங்களது பணியினை இழக்க நேரிடலாம் எனவும் கணித்துள்ளது.
5ல் 4 பேர் பாதிப்பு
வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்களில் தொழிலாளர்கள் மற்றும் வணிகங்கள் பேரழிவை எதிர்கொள்கின்றன. ஆக நாம் மிக வேகமாக செயல்பட வேண்டிய நேரம் இது. உலகளவில் 5 தொழிலாளர்களில் நான்குக்கு மேற்பட்டவர்கள் முழு அல்லது பகுதி மூடல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நடுத்தர மக்களுக்கு பாதிப்பு
மாறுபட்ட வருவாய் உள்ள குழுமங்கள் அதிகளவு நஷ்டத்தினை எதிர்கொள்ள வாய்ப்புண்டு. குறிப்பாக உயர்ந்த வருமானம் உடைய நடுத்தர மக்களுக்கு இதில் அதிகளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது கிட்டதட்ட 100 மில்லியன் முழு நேர ஊழியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பாக அமையும் என்றும் ஐஎல்ஓ தெரிவித்துள்ளது.
எந்தெந்த துறையெல்லாம் அதிகமாக பாதிக்கும்?
இதில் தங்குமிடம் அதாவது ஹோட்டல் மற்றும் உணவு துறை, உணவு சேவைகள், சில்லறை பொருள் உற்பத்தி துறை ஆகியவை அதிகளவில் பிரச்சனையை எதிர்கொள்ள வாய்ப்புள்ள துறைகளாக கூறப்படுகிறது. மேலும் 2020ம் ஆண்டு எதிர்கால நலன் குறித்த நடவடிக்கைகள் குறைந்துள்ளதோடு, அதிகளவு உலகளாவிய வேலையின்மையும் அதிகரிக்கும் என்று ஐஎல் ஓ அறிக்கை கூறுகின்றது.
அதிகளவு பிரச்சனை உள்ள துறைகள்
3.3 பில்லியன் தொழிலாளர் தொகுப்பில் ஐந்தில் நான்கு பேர் (81% பேர்) தற்போது முழு நேரமோ அல்லது தற்காலிக பணியிடை நீக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டும் அல்ல இவ்வாறு பணி நீக்கங்கள் செய்யப்படும் ஊழியர்களில் 1.25 பில்லியன் தொழிலாளர்கள் அதிகளவு பாதிப்பினை எதிர்கொள்ளும் துறைகளில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
பணி நீக்கம் பேரழிவுதான்
மேலும் இதில் பலர் குறைந்த ஊதியம் பெறும் குறைந்த திறமையான வேலைகளிலும் உள்ளனர். ஆக அங்கு திடீரென வருமான இழப்பு பேரழிவுகளை ஏற்படுத்தும் என்றும் ஐஎல்ஓ தெரிவித்துள்ளது. உலகளவில் முறைசாரா தொழில்களில் 2 பில்லியன் மக்கள் உள்ளனர். ஆக அவர்கள் பெரும் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
இந்தியாவில் பாதிப்பு கடுமையாக இருக்கும்
இந்த ஒட்டுமொத்த அறிக்கையினை விட இதில் முக்கியமாக கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்தியா கொரோனாவினால் கடுமையான தாக்கத்தினை எதிர்கொள்ளுமாம். இந்தியாவில் சுமார் 400 மில்லியன் பேர் முறை சாரா துறையில் பணிபுரிபவர்கள். ஆக கொரோனா நெருக்கடியின் போது வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.