கொரோனாவின் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனாவால் நிலைகுலைந்து போயுள்ளது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் நிதி தூண்டுதல், வட்டி வீதம் குறைப்பு உள்ளிட்ட பற்பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இருப்பினும் தற்போது வரையிலும் கூட பொருளாதாரம் மீண்டதாக தெரியவில்லை. நிபுணர்களோ இது மீண்டு வர சிறிது காலம் ஆகலாம் என கூறி வருகின்றனர்.
இதற்கே இப்படி எனில், தற்போது இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரவலானது வேகமெடுக்க தொடங்கியுள்ளது. முதல் முறையாக செய்யப்பட்ட லாக்டவுனுக்கே இன்னும் விடை தெரியாத நிலையில், தற்போது இரண்டாவது கட்டமாக நடவடிக்கைகள் தீவிரமானால், அடுத்து என்னவாகுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது.
வரி விதிப்பினை அதிகரிக்கலாம்
இப்படியொரு நிலையில் சர்வதேச நாணய நிதியம் சொத்துகள் மீதான வரி, அதாவது அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மீதான வரி விகிதம், கார்ப்பரேட்டுகள் மீதான வரி அதிகரிப்பு என்பது, கொரோனாவினால் முடங்கிபோன பொருளாதாரத்தினை மீட்டெடுக்க உதவும், இது தொற்று நோயிலிருந்து மீட்க உதவும் என ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
வாய்ப்பு உண்டு
சில நாடுகளில் தனி நபர் வருவாய் வரி அதிகரிப்பு, கார்ப்பரேட்டுகள் மீதான வரி அதிகரிப்பு என்பது புதியதாக அதிகரிக்கப்படலாம். அதற்கு வாய்ப்பும் உள்ளது. ஏனெனில் இது ஏற்கனவே கையில் இருக்கும் விஷயங்களில் ஒன்றாகும். கடந்த ஆண்டில் கொரோனாவின் காரணமாக சர்வதேச நாடுகள் சவாலான நிலையை எதிர்கொண்டன. மக்கள் தீவிர வறுமைக்கே சென்றனர். ஆக இதில் இருந்து மக்களை மீட்டெடுப்பதும் ஒரு சவாலான விஷயமே. ஆக இது யோசிக்க வேண்டிய விஷயமும் கூட.
ஏழை பணக்காரர் இடைவெளி
சமீபத்தில் ஆக்ஸ்பாம் அறிக்கையொன்றில், கொரோனா பெருந்தொற்று காலத்தில், தொற்றுநோய் எவ்வாறு பணக்காரர்களுக்கும் ஏழ்மையான மக்களுக்கும் இடையிலான வருமான இடைவெளியை விரிவுபடுத்தியது என்பதை கூறியது. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான வருமான இடைவெளி இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள எல்லா நாடுகளிலும் அதிகரித்துள்ளதாகவும் கூறியது.
ஏழைகள் மீண்டும் ஏழையாகினர்
மேலும் கொரோனா பணக்காரர்களை மேற்கொண்டு பணக்காரர் ஆக்கியது. ஏழைகளை மேலும் மிக ஏழையாக்கியது. அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத அளவுக்கு சேதத்தினை ஏற்படுத்தியதாகவும் இந்திய டுடே அறிக்கை ஒன்று கூறியது. ஆக ஐஎம்எஃப் கூறுவது போல, அதிக வருமானம் ஈட்டும் தரப்பினரிடமும், பெரிய பெரிய கார்ப்பரேட்டுகளுக்கும் வரி விதிப்பு என்பது சாத்தியமாகுமா? நடைமுறைக்கு இது சரி வருமா? என்பதும் பார்க்க வேண்டிய விஷயமாகத் தான் உள்ளது.