2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். நேற்று துவங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி முழுப் பட்ஜெட் என்பதால் அனைத்து தரப்பினருக்கும் சாதகமான அறிவிப்பை வெளியிட வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது.
காரணம் 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல், இதில் வெற்றிபெற்றால் பிஜேபி தலைமையிலான 3வது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கப்படும்.
மத்திய அரசு ரெசிஷன் அச்சம், பணவீக்கம், சர்வதேச சந்தையில் டிமாண்ட் சரிவு, ஏற்றுமதி பாதிப்பு, அன்னிய செலாவணி கையிருப்பு, வேலைவாய்ப்பின்மை போன்ற பல பிரச்சனைக்கு மத்தியில் தான் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது.
இந்த நிலையில் பட்ஜெட் குறித்து அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இருக்கு..!!
முதல் பட்ஜெட்
சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் நவம்பர் 26, 1947 இல் ஆர்.கே.சண்முகம் செட்டி தாக்கல் செய்தார். சண்முகம் செட்டி 1947 முதல் 1948 வரை இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகப் பணியாற்றினார்.
ஆர்.கே.சண்முகம் செட்டி
ஆர்.கே.சண்முகம் செட்டி 1892 ஆம் ஆண்டுக் கோவையில் பிறந்தவர் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து Knight Commander பட்டம் பெற்றவர், 1935 முதல் 1941 வரையில் கொச்சி பிராந்தியத்தின் திவான் ஆக இருந்தவர். 1953 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி மறைந்தார்
ஜவஹர்லால் நேரு
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 1958-1959 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பிரதமர் ஆவார். நிதி அமைச்சர் பொதுவாக மத்திய பட்ஜெட்டை வழங்குவார், ஆனால் பல்வேறு காரணங்களுக்காகப் பிரதமர் ஜவஹர்லால் நேரு நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றார்.
மொரார்ஜி தேசாய்
மொரார்ஜி தேசாய் இதுவரை அதிகபட்சமாக 10 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து முன்னாள் நிதியமைச்சரான ப சிதம்பரம் 9 முறை, பிரணாப் முகர்ஜி 8 முறை, நிர்மலா சீதாராமன் 2023 பட்ஜெட் உடன் சேர்ந்து 5 முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
73 முறை பட்ஜெட்
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு இதுவரையில் 73 முறை வருடாந்திர பட்ஜெட் அறிக்கையும், 14 முறை இடைக்காலப் பட்ஜெட், 4 மினி பட்ஜெட்டு அறிக்கைகளைத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
முதல் பெண்
இந்தியாவில் முதல் பெண்மணியாக 1970-71 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகிய மூன்று பிரதமர்கள் மட்டுமே பட்ஜெட்டை தாக்கல் செய்தனர்.
இரண்டு மணி நேரம்
2020 ஆம் ஆண்டுப் பட்ஜெட் தாக்கலின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுமார் இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் உரையாற்றி மிக நீண்ட பட்ஜெட் உரை என்ற சாதனையைப் படைத்தார்.
மிகக் குறுகிய பட்ஜெட் உரை
1977ல் நிதி அமைச்சராக இருந்த ஹிருபாய் முல்ஜிபாய் படேல் மிகக் குறுகிய பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் பேசினார். 1977 பட்ஜெட் உரையில் வெறும் 800 வார்த்தைகள் மட்டுமே இருந்தது.
பிரிட்டிஷ் ஆட்சி
1999-வரை பிரிட்டிஷ் வழக்கப்படி பிப்ரவரி மாத கடைசி வேலை நாளில் 5 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 1999ல் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா காலை 11 மணியாக மாற்றினார்.
அருண் ஜெட்லி
2016 முன்பு பிப்ரவரி மாதம் கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, 2017 முதல் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பிப்ரவரி 1 தேதி பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கத்தைக் கொண்டு வந்தார்.
ரயில்வே பட்ஜெட்
2017 முன் மத்திய பட்ஜெட் - ரயில்வே பட்ஜெட் தனித்தனியாகத் தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 92 ஆண்டுகளுக்குப் பின் 2017ல் மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டது.
நிர்மலா சீதாராமன்
இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அவருக்கும் இந்தப் பதவி கூடுதல் பொறுப்பாகவே இருந்தது. இதற்கு முன்பு இந்திரா காந்தி கூடுதல் பொறுப்பாகவே நிதியமைச்சகத்தைப் பெற்றார்.
பாஹி கட்டா
நிர்மலா சீதாராமன் பிரிட்டிஷ் காலத்து வழக்கமான பட்ஜெட்டை பிரீஃப்கேஸில் எடுத்துச் செல்லும் செயலை உடைத்து, 2019 ஆம் ஆண்டில் பட்ஜெட் ஆவணங்களைச் சமர்ப்பிக்கப் பாஹி கட்டா கொண்டு வந்தார்.
கொரோனா
நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டுக் கொரோனா காரணமாக முதல் முறையாகக் காகிதமற்ற பட்ஜெட் ஆக டேப்லெட் மூலம் பட்ஜெட்-ஐ தாக்கல் செய்தார். யூனியன் பட்ஜெட் செயலியையும் மத்திய அரசு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் டிஜிட்டல் பட்ஜெட் ஆகவே தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஹல்வா விழா
பட்ஜெட் ஆவணத்தை அச்சடிப்பதற்காக முன்னதாகவே தொடங்கவிருந்த "ஹல்வா விழா" கொரோனா தொற்றுநோய் காரணமாகக் கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்-க்கு ஜனவரி 26 ஆம் தேதி ஹல்வா நிகழ்ச்சி நடந்தது.
ஹல்வா நிகழ்ச்சி
மத்திய நிதியமைச்சகம் ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, பட்ஜெட் அறிக்கை தயாரிப்புகள் முடிக்கப்பட்ட பின்பு இதை மக்களுக்கும், பிற அரசு துறைகளுக்கும், தொழிற்துறைக்கும் எடுத்துரைக்கும் விதமாக அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியை நடத்தும்.