கடந்த சில வருடங்களாக இந்திய சந்தைகளில், வியாபாரிகள் மட்டுமின்றி சாமியார்களும் வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.
அதற்கு ஆகச் சிறந்த உதாரணம் யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தான். பதஞ்சலி நிறுவனம் தனியாக அவுட் லெட் போட்டு வியாபாரம் செய்யும் அளவுக்கு பொருட்களைத் தயாரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக பதஞ்சலி நிறுவனமும் ஓரளவுக்கு நன்றாகவே வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறது. ஆனால் இப்போது ஒரு பெரிய விஷயத்தைச் சொல்லி இருக்கிறார்கள்.
ருச்சி சோயா
சமீபத்தில் தான், அதானியோடு போட்டி போட்டு, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டு இருந்த, 4,500 கோடி ரூபாய் மதிப்புள்ள ருச்சி சோயா எண்ணெய் நிறுவனத்தை பதஞ்சலி வாங்கியது. ஆக சமையல் எண்ணெய் சந்தையிலும் பதஞ்சலி தடம் பதிக்க இருப்பதை அப்போதே உணர முடிந்தது.
13,000 கோடி
இந்த நிதி ஆண்டில், பதஞ்சலி நிறுவனத்தின் வருவாய் 25,000 கோடி ரூபாயைத் தொடும் என பாபா ராம்தேவே சொல்லி இருக்கிறார். அந்த 25,000 கோடி ரூபாயில், 12,000 கோடி ரூபாய் மட்டுமே பதஞ்சலி பொருட்களில் இருந்து வரும். மீதமுள்ள 13,000 கோடி ரூபாய் ருச்சி சோயா எண்ணெயில் இருந்து வரும் எனச் சொல்லி இருக்கிறார் பாபா.
நாங்க தான் டாப்பு
மேலும் பேசிய பாபா ராம்தேவ் "அடுத்த ஐந்து வருடத்தில், இந்தியாவின் FMCG சந்தையில் 50,000 முதல் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு நாங்கள் டேர்ன் ஓவர் செய்து சந்தையை பிடித்து இருப்போம். அப்போது இந்தியாவின் நம்பர் 1 FMCG நிறுவனமாக பதஞ்சலி இருக்கும்" எனச் சொல்லி இருக்கிறார்கள்.
ஹிந்துஸ்தான் யுனிலிவர்
பாபா ராம் தேவ் சொல்வது போல, பதஞ்சலி நிறுவனத்தால் செய்ய முடியுமா..? என ஹிந்துஸ்தான் யுனிலிவரின் நிதி நிலையைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. ஹிந்துஸ்தான் யுனிலிவர் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் 38,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருக்கிறது.
சிரமம் தான்
க்ளாக்ஸோ ஸ்மித் க்ளின் இணைப்புக்குப் பின், ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் இந்த வருவாய் மேலும் அதிகரிக்கும். எனவே பதஞ்சலி சொல்வது போல, ஹிந்துஸ்தான் யுனிலிவரைத் தாண்டி இந்தியாவில் மிகப் பெரிய FMCG நிறுவனமாக உருவெடுப்பது சிரமம் போலத் தான் தெரிகிறது. இருப்பினும் ஹிந்துத்வ அரசியல் சூழ்நிலைகளால் பதஞ்சலி டாப்புக்கு வந்தாலும் வரலாம்.