யூ பி ஐ - Unified Payments Interface (UPI) என்று அழைக்கப்படும் இந்த சேவையை, மத்திய ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்ட என் பி சி ஐ என்கிற நிறுவனம் தான் கடந்த 2016-ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்த யூ பி ஐ கொண்டு வந்ததில் இருந்து இந்தியாவில், ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்வது அளவுக்கு அதிகமாகவே வளர்ச்சி கண்டிருக்கிறது. அதற்கு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பும் ஒரு அழுத்தமான காரணம் தான்.
இப்போது இந்த யூ பி ஐ பணப் பரிவர்த்தனை வழியாக, கடந்த அக்டோபர் 2019-ல், 1.14 பில்லியன் பணப் பரிவர்த்தனைகள் நடந்து இருக்கிறதாம். அதாவது 114 கோடி பணப் பரிவர்த்தனைகள். இதையே அக்டோபர் 2018 உடன் ஒப்பிட்டால் பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை சுமார் 138 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
சரி எவ்வளவு பணம் கை மாறி இருக்கிறது..? அக்டோபர் 2019-ல் 114 கோடி பணப் பரிவர்த்தனைகள் வழியாக, சுமார் 1.91 லட்சம் கோடி ரூபாய் பணம் கை மாறி இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2019-ல் 1.46 லட்சம் கோடி ரூபாய் கை மாறிய தொகை உடன், இந்த அக்டோபர் 2019-ல் கை மாறிய தொகையை கணக்கிட்டால் சுமார் 30 சதவிகிதம் அதிகம்.
சமீபத்தில் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கைகளின் படி, கடந்த 2018 - 19 நிதி ஆண்டில், யூ பி ஐ வழியாக நடக்கும் பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை, டெபிட் கார்டுகள் வழியாக நடக்கும் பணப் பரிவர்த்தனைகளை விட 1.2 மடங்கு அதிகம் என நமக்கே அதிர்ச்சி அளிக்கிறது. தற்போது , யூ பி ஐ அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மூன்று ஆண்டுகளில் 100 மில்லியன் பயன்பாட்டாளர்கள், இந்த யூ பி ஐ சேவையை பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள். அடுத்த மூன்று வருடங்களுக்குள் இந்த எண்ணிக்கை சுமார் 5 மடங்கு அதிகரித்து 500 மில்லியன் பயன்பாட்டாளர்கள் இந்த யூ பி ஐ சேவையைப் பயன்படுத்துவார்கள் எனச் சொல்கிறார் என் பி சி ஐ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி திலீப் அஸ்பே (Dilip Adbe).