மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது நமது முதலீடு பாதுகாப்பானது மட்டுமின்றி நிலையான 10 முதல் 12 சதவீத வருவாய் தரக் கூடியது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
குறிப்பாக SIP என்று கூறப்படும் மாதாந்திர முதலீட்டு திட்டம் என்பது தான் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்து நாம் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்து வந்தால் அந்தத் திட்டம் முடியும் போது நம் கையில் ஒரு மிகப்பெரிய தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த திட்டத்தில் கால அளவை நாம் மாற்ற முடியுமா என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
SIP மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் SIP மூலம் முதலீடு செய்வது என்பது ஒரு ஒழுக்கமான முதலீடு மற்றும் பாதுகாப்பான முதலீடு என நிதி ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யும் தொகை மற்றும் காலகட்டம் ஆகியவற்றை விருப்பத்தின்பேரில் தேர்வு செய்துகொள்ளலாம். அதேபோல் வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை என முதலீட்டு தவணையையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
கால அளவை மாற்றலாமா?
இந்த நிலையில் ஒருவர் மாதந்தோறும் SIP முதலீட்டை தொடங்கிய பின்னர் அதை தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப கால அளவை அல்லது தொகையை மாற்றிக் கொள்ள முடியுமா என்றால் முடியும் என்பதே பதிலாகும். உதாரணத்திற்கு ஒருவர் 10 வருடத்துக்கு ரூபாய் 5000 மாதம்தோறும் SIP மூலம் முதலீடு செய்கிறார் என்றால் அந்த காலகட்டத்தை அவரால் அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். அதாவது நமது இலக்கை 10ல் இருந்து 15 வருடங்களாக அதிகரிக்கவோ அல்லது 5 வருடங்களாகவோ குறைக்கவோ முடியும்.
முதலீட்டு தொகையை மாற்றலாமா?
அதேபோல் நீங்கள் மாதம் ரூ.5000 முதலீடு செய்து வருகிறீர்கள் என்றால் அதை ரூ10,000 என அதிகரிக்கவோ அல்லது ரூ.2500 என குறைக்கவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் இருக்கும் இந்த நெகிழ்வுத்தன்மை முதலீட்டாளர்களுக்கு மிகச் சிறந்த ஒரு அம்சம் ஆகும்.
திடீரென SIPயை நிறுத்தலாமா?
மேலும் SIP முறையில் ஒருவர் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டால் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து வரும் நிலையில் திடீரென அவருக்கு ஏதாவது நிதிச்சிக்கல் ஏற்பட்டால் தற்காலிகமாக SIPயை நிறுத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது. அதன் பின்னர் உங்கள் நிதி நிலைமை சீரடைந்தால் மீண்டும் SIPயை தொடரலாம்.
அபராதம் உண்டா?
SIPயை நிறுத்தினால் நீங்கள் அபராதத் தொகை உட்பட எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும் நீங்கள் நிர்ணயித்த இலக்கிற்கு முன்னதாகவே SIPயை முடித்துக் கொள்ள விரும்பினாலும் 30 நாட்களுக்கு முன்னர் ஒரு விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்தால் உங்கள் அப்போதைய முதலீடு உங்கள் கைக்கு வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.