ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று ஒரு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்பது தெரிந்ததே.
குறிப்பாக எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் என்பதும் அதேபோல் சில வங்கிகளில் புதிய விதிகள் அமலுக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை அதாவது நவம்பர் 1ஆம் தேதி முதல் 5 முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த மாற்றங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்
காப்பீடுகளுக்கு KYC கட்டாயம்
KYC என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகி விட்டது என்பதும், ஒரு வாடிக்கையாளரின் முக்கிய விபரங்கள் அடங்கிய இந்த KYC முறையை வங்கிகள் உள்பட பல இடங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நவம்பர் 1 முதல் காப்பீட்டு கோரிக்கைகளுக்கு KYC கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் 2022ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் உடல்நலம் மற்றும் பொது காப்பீட்டிற்கு KYC சரிபார்ப்பு கட்டாயம் என கூறியுள்ளது. தற்போது KYC சரிபார்ப்பு முறை இருந்தாலும் அது கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்பிஜி சிலிண்டருக்கு OTP கட்டாயம்
இதுவரை எல்பிஜி சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்படும்போது OTP கட்டாயம் இல்லை என்ற நிலையில் நவம்பர் 1 முதல் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனிமேல் எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் போது, நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அந்த OTP எண்ணை சிலிண்டர்கள் டெலிவரி செய்யும் போது கொடுத்தால் மட்டுமே சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
மின்சார மானியத்தில் புதிய விதி
டெல்லியில் மின் மானியத்திற்கான புதிய விதிகள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான மின் மானியத்திற்கு விண்ணப்பிக்க இன்று அதாவது அக்டோபர் 31ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதுவரை மானியத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் மானியம் இல்லாத பில்களை செலுத்த வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். டெல்லியில் 58 லட்சம் வீட்டு மின் நுகர்வோர் உள்ள நிலையில் அவர்களில் 47 லட்சம் பேர் மானியத்தை பெறுகின்றனர்.
ஜிஎஸ்டி ரிட்டர்னுக்கு நான்கு இலக்க HSN கோட்
வரி செலுத்துவோர் ரூ.5 கோடிக்கும் குறைவான வருவாய் உள்ளவர்கள் ஜிஎஸ்டி ரிட்டனில் நான்கு இலக்க HSN கோட் எண்ணை நாளை முதல் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ரயில்களுக்கான புதிய கால அட்டவணை
இந்திய ரயில்வே ஒருசில தொலைதூர ரயில்களுக்கான புதிய கால அட்டவணையை அறிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் இந்த புதிய அட்டவணை நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த புதிய அட்டவணையால் 13,000 பயணிகள் ரயில்கள் மற்றும் 7,000 சரக்கு ரயில்களின் நேரம் மாறும் என கூறப்படுகிறது.