வருமான வரி துறையின் புதிய இணையதளம் மிகச்சரியாக கடந்த ஆண்டு ஜூன் 7ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று அதே ஜூன் 7ஆம் தேதி அந்த இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாக வெளி வந்திருக்கும் தகவலை அடுத்து வருமான வரித்துறை அலுவலகம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
வருமானவரித் துறை இணையதளத்தில் ஒரு சில சாப்ட்வேர்களை அணுகுவதில் பிரச்சனை ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து வருமானவரித்துறை கூறிய விளக்கம் அளித்துள்ளது.
வருமானவரித் துறை இணையதளத்தில் ஒரு சில சிக்கல்கள் இருப்பதாகவும் அந்த சிக்கலைச் சரிசெய்ய இன்போசிஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதே நேரத்தில் இந்த இணையதளம் ஹேக் செய்யப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
ஆண்டுவிழா
ஜூன் 7-ஆம் தேதி இந்த இணையதளத்தின் முதலாவது ஆண்டுவிழா என்ற நிலையில் இன்போசிஸ் நிறுவனம் இந்த சிக்கலை தீர்ப்பதற்கு முன்னுரிமை எடுத்து வருவதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இணையதளம்
வருமானவரித் துறையின் இணையதளத்தில் திடீரென சில பிரச்சினைகள் இருந்ததாக எங்கள் கவனத்திற்கு தகவல் வந்தது. இதை அடுத்து வருமான வரித்துறை இணையதளத்தை ஆய்வு செய்த தொழில் நுட்ப வல்லுநர்கள் உடனடியாக இந்த பிரச்சினைகளை பரிசீலனை செய்யுமாறு இன்போசிஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனமும் முன்னுரிமை அடிப்படையில் இந்த பிரச்சனையை அவர்களுடைய தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியால் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சகம்
இந்த நிலையில் முதல் கட்ட தகவலின்படி வருமான வரித்துறை போர்ட்டலில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று நிதி அமைச்சக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். எனவே வருமான வரித்துறை இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய இணையதளம்
வருமானவரித் துறை இணையதளத்தில் பல்வேறு வசதிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்படுத்தி கடந்த ஆண்டு ஜூன் 7ஆம் தேதி புதிய இணையதளம் நுகர்வோரின் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது. இந்த இணையதளம் வரி செலுத்துபவர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது என்றும் முந்தைய இணையதளத்தை விட இந்த இணையதளத்தில் வருமான வரி தாக்கல் செய்வது மிகவும் எளிதாக இருந்ததாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.