மத்திய நேரடி வருமான வரித் துறை கொரோனா தொற்றுக் காரணமாக வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாளாக இருந்த ஜூன் 30ஆம் தேதியைச் செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் நீட்டித்தது. இதற்கிடையில் தான் மத்திய நிதியமைச்சகம் இன்போசிஸ் நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட புதிய வருமான தளத்தை அறிமுகம் செய்தது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய வருமான வரித் தளத்தில் துவக்க நாள் முதல் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால், மக்களால் வருமான வரியைத் தாக்கல் செய்ய முடியாமல் உள்ளது.
மக்களின் நிலையை உணர்ந்த மத்திய நேரடி வருமான வரித் துறை மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதல் உடன் வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரையில் கால அவகாசம் அளிப்பதாக அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தால் பலரும் பல விதமான பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில் மத்திய அரசு 2020-2021ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யச் செப்டம்பர் வரையில் கால நீட்டிப்பு செய்தது. இது சாமானிய மக்களுக்குப் பெரிய அளவில் உதவியது.
புதிய வருமான தளத்தில் கோளாறு
ஆனால் புதிய வருமான தளத்தில் புதிதாகப் பல சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டாலும், இத்தளத்தில் பல்வேறு கோளாறு இருக்கும் காரணத்தால் வரி செலுத்துவோர் வருமான வரி அறிக்கையை முழுமையாகத் தாக்கல் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். குறிப்பாக இப்புதிய வருமான வரித் தளத்தில் விரைவாகக் கூடுதலான வரி தொகையைத் (Tax Returns) திருப்பி அளிக்கும் சேவை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எதிர்பார்த்து இருந்தனர்.
டிசம்பர் 31 வரை நீட்டிப்பு
புதிய வருமான வரித் தளத்தில் ஏற்பட்டு உள்ள பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு மத்திய நேரடி வருமான வரித் துறை வருமான வரி தாக்கல் செய்ய 2வது முறையாக அதாவது செப்டம்பர் 30-க்கு பின்பு தற்போது டிசம்பர் 31 கடைசி நாளாக அறிவித்துள்ளது.
இன்போசிஸ்-க்கு செப்டம்பர் 15 கடைசி
இதற்கிடையில் கடந்த வாரம் மத்திய நிதியமைச்சகம் மற்றும் புதிய வருமான வரித் தளத்தை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனத்திற்கு மத்தியில் நடந்த முக்கியமான கூட்டத்தில், புதிய தளத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தீர்க்க உள்ளதாக இன்போசிஸ் உறுதியளித்துள்ளது.
முக்கிய மாற்றங்கள்
வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள்-ஐ டிசம்பர் 31 வரையில் நீட்டித்துள்ளது மட்டும் அல்லாமல், இன்னும் சிலவற்றுக்கு மத்திய நேரடி வருமான வரித் துறை கால நீட்டிப்பு செய்துள்ளது.
1. 2021-22 கணக்காண்டுக்கான return of income அறிக்கையைச் சமர்ப்பிக்கப் பிப்ரவரி 15,2022 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு நவம்பர் 30 வரையில் நீட்டிக்கப்பட்டது.
2. வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் மற்றும் 92E கீழ் செய்யப்பட்ட பணப் பரிமாற்றம் குறித்துக் கணக்காளர் தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள்-ஐ ஜனவரி 31, 2022 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
3. 2020-21நிதியாண்டுக்கான report of audit அறிக்கையைச் சமர்ப்பிக்க ஜனவரி 15,2022 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு அக்டோபர் 31, 2021 வரையில் நீட்டிக்கப்பட்டது.
4. 2021-22 கணக்காண்டுக்கான தாமதம் அல்லது திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்ய முன்பு ஜனவரி 30, 2022 வரையில் நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது இதை மார்ச் 31, 2022 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
வட்டி மற்றும் தாமதம் கட்டணம்
புதிய வருமான வரித் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜூலை 31ஆம் தேதிக்குப் பின் வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட பல வருமான வரிச் செலுத்துவோரிடம் இருந்து கூடுதலான வட்டி மற்றும் தாமதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. வருமான வரித்துறை செப்டம்பர் 30 வரையில் வருமான வரி செலுத்தக் கால நீட்டிப்பு செய்துள்ள நிலையிலும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
தவறான கணக்கீடு
இது முழுக்க முழுக்கத் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே நடந்துள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் 2020-21ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி செலுத்தும் போது கூடுதலான வட்டி மற்றும் தாமதம் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்தால் அதை மொத்தமாகத் திருப்பி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.